தனிமையின் இரண்டு பில்லியன் ஒளி ஆண்டுகள்
மனித இனம் இந்தச் சிறிய கோள வடிவிலான
விண்பொருள் மீது
உறங்கி, விழித்து, வேலை செய்து
மேலும் சில நேரங்களில்
செவ்வாய்க் கிரகத்தில் இருக்கும் நண்பர்களுக்காக
வாழ்த்தும் தெரிவிக்கிறது
நான் தனிப்பட்ட கருத்து எதுவும் கொண்டிருக்கவில்லை
செவ்வாய்க் கிரக வாசிகள் அவர்களுடைய
கோள வடிவிலான விண்வெளிப் பொருளின் மீது
என்ன செய்வார்களென்று
ஆனால் ஒரு வேளை அவர்கள்
பூமியில் வசிப்பவர்களை நண்பர்களாக்கிக் கொள்ள ஆவல் கொண்டவர்களாக இருக்கலாம்
அதில் எந்த சந்தேகமுமில்லை
தனிமையின் ஆற்றலே
ஒவ்வொருவரையும் இழுக்கின்ற
பிரபஞ்சத்தின் ஈர்ப்புசக்தி
ஏனெனில் பிரபஞ்சம் என்பது உருக்குலைந்தது
அதில்
நாம் ஒருவர் மற்றொருவரைக் கண்டுபிடிக்க முயல்கிறோம்
ஏனெனில் பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டே செல்கிறது
நாம் சஞ்சலமடைகிறோம்
தனிமையின் இரண்டு பில்லியன் ஒளி ஆண்டுகளுடைய கடுங்குளிர்ச்சியுடன்
நான் திடீரென்று தும்முகிறேன்.
ஒரு நதி
எது கடந்த காலமாக இருக்கிறதோ
அது
மீண்டும் என்னை நோக்கிப் பாய்ந்து வருகிறது
நான் ஒரு நதியாகிறேன்.
சற்றும் அறிமுகமில்லாத நினைவொன்று
தனது இரவின் உணர்வுகளைப் பற்றிப் பேசத்துவங்கும் பொழுது
நான் வெடித்துச் சிதறுகிறேன்
மேலும்
அதனுள்ளாகப் பாய்ந்து செல்கிறேன்
மாலைப்பொழுது
அருகிலிருக்கும் காலி அறையில்
யாரோ ஒருவர் சத்தம் போட்டு அழைக்கிறார்
நான் செய்ததைப் போலவே
நான் வெடுக்கென்று
கதவைத் திறக்கிறேன்
இங்கே இருள் அப்பியிருந்தாலும்
சூரிய வெளிச்சம் அறையில்
கரைபுரண்டோடுகிறது.
அது இரகசியமாக புலம்பெயரும் ஒரு நிழலை யாரோ ஒருவர் சற்றுமுன்னர்தான்
விட்டுச்சென்றதைப் போல தோற்றமளிக்கிறது.
மேலும் அதைப் பின்தொடர்ந்து செல்ல நான் தலைதெறிக்க ஓடியபோது
அங்கே ஒருவரும் இல்லை
அது ஒரு வழக்கமான மாலைப்பொழுது மட்டுமே.
பூ ஜாடியை
தூசு சூழ்கிறது
நான் வானின் மீதிருந்த சன்னல் கதவைத் திறக்கிறேன்
அங்கிருந்தும் கூட
யாரோ ஒருவர் சத்தம் போட்டு அழைக்கிறார்
நான் செய்ததைப் போலவே
– ஷந்தொரா தனிக்கா
தமிழில் : விருட்சன்