Prisoner #1056

1. மனவடுக்களின் காலம்

Prisoner #1056 என்கின்ற இந்த சுயசரிதை நூலை இரண்டு பகுதிகளாகப் பிரித்துப் பார்க்கலாம். முதலாவது பகுதி ரோய் ரத்தினவேல் என்பவர் இலங்கையில் பெற்ற போர்க்கால வடுக்கள். மற்ற பகுதி கனடாவில் அவர் பெறுகின்ற அனுபவங்கள்.

இலங்கையில் பிறந்த ரோய் ரத்தினவேல் போரின் நிமித்தம் அனுபவித்தவை மிகுந்த துயரமானவை. கொழும்பில் ரோய் பிறந்தாலும், நாட்டு நிலைமைகளால் ரோய் யாழ்ப்பாணத்து பருத்தித்துறைக்கு அவரது தாயாரோடும், தமையனோடும் அனுப்பப்படுகின்றார். தகப்பன் மட்டும் கொழும்பில் தங்கி வேலை பார்க்கின்றார். அதுவரையும் ரோயின் குடும்பத்தார் வாடகைக்குக் கொழும்பில் இருக்கும் இடம் ஒரு இலங்கை இராணுவ கேர்ணலின் வீடாகும்.

ரோய் பருத்தித்துறையில் இருக்கும்போது, இலங்கை இராணுவத்தின் ஒபரேஷன் லிபரேஷன் (1987) நடவடிக்கையின்போது பெற்றோரின் முன்னால் இராணுவத்தால் கைது செய்யப்படுகின்றார். அவ்வாறு கைது செய்யப்படும் ரோய் கப்பல் மூலமாக மூலம் பூசா ஜெயிலுக்குக் கொண்டு செல்லப்படுகின்றார். கிட்டத்தட்ட 2700 பேர் தன்னைப் போலக் கைது செய்யப்பட்டு காலில் சங்கிலியோடு கப்பலில் இருந்து  காலி  நகரின் தெருக்களில் ஜெயிலுக்கு இழுத்துக்கொண்டு செல்லப்பட்டதாக ரோய் குறிப்பிடுகின்றார். அங்கே அவருக்குக் கொடுக்கப்படும் இலக்கமே கைதி #1056.

கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் சிறைச்சாலைக்குள் சித்திரவதை செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் ரோய், அன்றைய  பாதுகாப்புத்துறை அமைச்சரான லலித் அத்துலக் முதலியின் மனைவியான சிறிமணியைச் சந்திக்கின்றார். அவரிடம் சிறைப்பட்டிருக்கும் தனது நிலவரத்தை, தங்களின் குடும்பத்து நண்பரான கேர்ணல் பெர்னாண்டோவிற்குச் சொல்லும்படி கூறுகின்றார்.

கேர்ணல் பெர்னாண்டோ அதற்கு முதல் வருடம் (1986)  அவரது  மகன்களில் ஒருவரைப் புலிகளின் ஒட்டுசுட்டான் தாக்குதலில் இழந்திருக்கின்றார். எனினும் அதை ஒருபுறம் ஒதுக்கிவைத்து கேர்ணல் கொழும்பிலிருந்து மூன்று மணித்தியாலங்கள் பயணித்து காலிக்கு வந்து ரோயை சிறையிலிருந்தும் சித்திரவதைகளிலிருந்தும் மீட்கின்றார்.

யாழ் தீபகற்பத்தைக் கைப்பற்றும் இலங்கை இராணுவத்தின் ஒபரேஷன் லிபரேஷன் நடவடிக்கை இந்திய அரசின் தலையீட்டால் இடைநடுவில் நிறுத்தப்படுவதை நாம் அறிவோம். ரோய் ஜெயிலில் இருந்து வெளியே வரும்போது இலங்கை-இந்தியா உடன்படிக்கை கைச்சாத்தப்பட்டு விட்டது.

ரோயை இந்தக் கேர்ணல்  சிறைச்சாலைக்குள் இருந்து காப்பாற்றியதுபோல, ரோயின் தகப்பனை 1983 இனப்படுகொலைகளின்போது சிங்களக்காடையர்களிடம் இருந்து அந்தக் கேர்ணலே காப்பாற்றி பத்திரமாக யாழ்ப்பாணத்துக்கும் அனுப்பி வைத்தவர். அத்தோடு ரோயின் தமையன் வீட்டைவிட்டு ஓடி (இங்கே வெளிப்படையாகச் சொல்லப்படாதபோதும், அவர் இயக்கம் ஒன்றில் சேர்ந்திருக்கக்கூடும்), 1984களில் பூஸா முகாமில் சிறை வைக்கப்படுகின்றார்.  தன் சொற்கேளாது வீட்டை விட்டு ஓடிய மகன் என்பதால் ரோயின் தகப்பன் மூத்த மகனைச் சிறைக்கு வெளியே எடுக்க விரும்பவில்லை. அப்போதும் இந்த கேர்ணலே ரோயின் தமையனைச் சிறைச்சாலையிலிருந்து வெளியே எடுக்கின்றார். அந்தத் தமையன் இந்தியாவுக்குப் படகில் போய், ஒரு மாதிரியாக டென்மார்க்கிற்கு 1986இல் சென்றுவிடுகின்றார்.

ரோய் தொடக்கத்திலிருந்தே புலிகளின் ஆதரவாளராகத் தன்னைக் காட்டிக் கொண்டாலும், ரோயின் தகப்பன் புலிகளை எதிர்ப்பவராகவே இருக்கின்றார். ஒருவகையில் அவர்கள் அஹிம்சை வழியில் எல்லாவற்றையும் தீர்க்க விரும்பிய முந்தைய ஒரு தலைமுறை எனச் சொல்லலாம். அத்துடன் புலிகள் ஏனைய இயக்கங்களைச் சகோதரப் படுகொலை செய்ததால் ரோயின் தகப்பனுக்குப் புலிகளைப் பிடிப்பதில்லை.

பூசா சிறைச்சாலையிலிருந்து வந்த ரோயை, பெற்றோர் தொடர்ந்து இலங்கைக்குள் வைத்திருக்க விரும்பவில்லை. அவரை ஏதேனும் நாட்டுக்குப் பத்திரமாக அனுப்பிவிட விரும்புகின்றனர். ரோய் கனடா போவதற்குத் தகப்பன் கனடா தூதரலாயத்துக்கு விண்ணப்பிக்கின்றார். ரோயிக்கு நடந்த சித்திரவதைகள் அவருக்கு எளிதாக விஸா கிடைத்துவிடச் செய்துவிடுகின்றன. ரோயை கனடா விஸாவுக்காய் நேர்காணல் செய்யும் கனடிய அதிகாரி, ரோயின் சித்திரவதை அடையாளங்களைக் காட்டச் சொல்கின்றார். அவர் தனது ஷேர்ட்டைக் கழற்றிக் காட்டுகின்றார்.

1988 ஏப்ரல் மாதத்தில் ரோய் கனடாவிற்கு புதிய வாழ்வைத் தொடங்க வருகின்றார். வந்த மூன்று நாட்களிலேயே இலங்கையிலிருந்து ஒரு பேரிடிச் செய்தியை அறிகின்றார். பருத்தித்துறையில் அவர்களின் வீட்டில் வைத்து ரோயின் தகப்பனை இந்திய இராணுவம் சுட்டுக் கொன்று விடுகின்றது. அடுத்த அறையை முன்னரே பூட்டிவிட்டதால் அதற்குள் இருந்த தாயார் எப்படியோ தப்பிவிடுகின்றார்.

சிறைச்சாலைக்குள் இலங்கை இராணுவத்தால் பெற்ற சித்திரவதைகளோடு, தகப்பனையும் இந்திய இராணுவத்துக்குப் பலிகொடுத்து ஒரு புதிய வாழ்வைத் தனது மனவடுக்களுக்கோ, சித்திரவதைகளுக்கோ உரிய சிகிச்சையோ, ஆலோசனைகளோ பெறாமல் கனடாவின்  குதிரை போல நில்லாமல் ஓடும் கடின வாழ்வுக்குள் தன்னை உடனேயே நுழைத்துக் கொள்கின்றார் ரோய்.

2. கனடாக் கனவு

250 பக்கங்கள் இருக்கும் இந்நூலில், இவை அனைத்தையும் 75 பக்கங்களுக்குள் ரோய் சொல்லிவிடுகின்றார். மிகுதிப் பக்கங்கள் கனடாவில் அவர் பெற்ற அனுபவங்களையும் விவரிப்பதாய் இருக்கின்றது. யாழில் தகப்பனின் இழப்போடு தவிதவிப்போடு இருக்கும் தாயைக் கனடாவுக்கு அழைக்க அவர் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கின்றது. பதினெட்டு வயதில் ஒரு பதின்மனாகக் கனடாவில் வந்திறங்கி, இங்குள்ள பாடசாலையில் கல்வியைத் தொடர்ந்தாலும், அதைக் கைவிட்டு

தொழிற்சாலையொன்றில் பணியாளராகவும், அலுவலகங்களைச் சுத்திகரிப்பாளராகவும், அடுக்கங்களில் பாதுகாவலனாகவும் ஒரே நேரத்தில் பல்வேறு தொழில்களைச் செய்யத் தொடங்குகின்றார்.

இவ்வாறான அடிநிலை வேலைகளைச் செய்தால், தன்னால் ஒருபோதும் பொருளாதாரத்தில் முன்னேறவோ, தாயைக் கனடாவுக்கு அழைக்கவோ முடியாது என்று உணர்ந்து, ஒரு நிரந்தர Office வேலையை ரோய் தேடத் தொடங்குகின்றார். எந்த அனுபவமோ, உரிய ரெஸிமியோ இல்லாது, ஒரு முதலீட்டு நிறுவனத்தின் மெயில் ரூமில் ஒரு வேலையைப் பெற்றுக் கொள்கின்றார்.

இப்படி ஒரு அடிநிலைப் பணியாளராக  வேலையைத் தொடங்கும் ரோய், எப்படி அந்த பல பில்லியன் மதிப்புள்ள நிறுவனத்தின் ஒரு பகுதிக்குப் பிற்காலத்தில்  Excutive Vice President ஆக ஆகின்றார் என்பதுதான் மிச்ச கதை. ஒருவகையில் இது ‘அமெரிக்கக் கனவு’ போல ஒரு குடியேற்றவாதியின் ‘கனடா கனவு’ கதையெனச் சொல்லலாம்.

ரோயினது சித்திரவதை அனுபவங்கள், தகப்பனை இந்திய இராணுவம் பலியெடுப்பது என்பது மிகவும் துயரமான சம்பவங்கள். தகப்பனின் இறந்த உடலோடு தாய் பல மணித்தியாலங்கள் தனித்து இருந்தது,  பின்னாட்களில் நிரந்தர உளவடுவாகி   ஸ்கிரினோபோபியாவுக்குப் போய் கடினமான வாழ்வு வாழ்ந்து முடிந்த அந்தத் தாயாரின் அனுபவங்களையும் ஒரு கையறு நிலையிலே நாம் வாசிக்கின்றோம். ரோயையும் இந்தத் துயர நினைவுகளும், அவர் அனுபவித்த சித்திரவதைகளும் கோபக்கார ஒருவராக அவரை மாற்றி உளவியல் ஆலோசனைகளுக்குக் கொண்டு செல்வதையும் விளங்கிக் கொள்ளமுடிகின்றது.

தகப்பன் இறந்த துயரை வெளியில் பாயவிடாது தனக்குள் அடக்கிக் கொண்ட ரோய், கிட்டத்தட்ட பதினான்கு வருடங்களின் பின் (2002) பருத்தித்துறைக்குப் போய் தகப்பன் கொல்லப்பட்ட வீட்டை (அந்த வீட்டை ரோயின் தாய் கொஞ்சக்காலத்திலேயே வேறொருவருக்கு விற்றும் விடுகின்றார்) போய்ப் பார்த்து அங்கே மண்டியிட்டு தகப்பனுக்கு உரிய பிரியாவிடை கொடுத்த சில காலங்களின் பின்னரே அவரால் நெஞ்சை அடைத்துக் கொண்டிருந்த இந்தத் துயர நினைவுகளிலிருந்து ஓரளவுக்கு விடைபெற முடிகின்றது.

3. இரு உலகுகளின் இணைவும் விரிசலும்

கனடாவுக்கு வந்தவுடன் ரோயும் எல்லா குடியேற்றவாதிகளைப் போலத் தத்தித்தத்தி மெதுவாகத்தான் மேலே ஏறி வேண்டியிருக்கின்றது. ஆனால் ரோய்க்கு நல்ல மனிதர்கள் விரைவில் அறிமுகமாவதும், அவரது காதலி அவருக்கு வேலையில்லாத காலங்களில் உதவுவதும் போன்று நிகழ்வது விதிவிலக்கானது. இது எல்லா குடியேற்றவாதிகளுக்கும் எளிதில் சாத்தியமாவதில்லை. முக்கியமாக எல்லா ஆவணங்களையும் அடையாளமின்றி அழித்துவிட்டு அகதிகளாக வந்தவர்க்கு இது கனடாவில் இது எளிதாக நடப்பதுமில்லை. ரோய் இது தனது சொந்த அனுபவமென மிகுதிக் கதைகளைச் சொல்லியிருந்தால் பரவாயில்லை. அதனோடு நிறுத்தாமல் கனடாவை ஒரு ‘சொர்க்கபுரியாக’ மட்டும் கட்டியமைக்கும்போதே வாசிக்கும் நமக்கு அவரோடு முரண் உரையாடலைத் தொடங்கவேண்டியிருக்கின்றது.

கனடா அவர் வேலை நிமித்தம், பரந்த தளத்தின் வெள்ளையினத்தவர்கள் நிரம்பியிருக்கும் இதன் மத்திய பகுதிகளுக்கும், சிற்றூர்களுக்கும் பயணித்ததால் ரோயின் அனுபவங்கள் ஒருவகையில் பெறுமதியானவைதான். எனினும் ரோயிற்குள் அவரையறியாமலே இங்குள்ள பல தமிழர்களைப் போன்ற தொபுக்கடீர் என்று தேசிய நீரோட்டத்துக்குள் குதிக்கும் கனடா வலதுசாரியினர் போன்ற ‘பெருமை’ வந்துவிடுகின்றது. எப்போதும் இங்கு வெளியாகும் நாஷனல் போஸ்டையே வாசிப்பேன் என்று அவர் சொல்லும்போதே அவரின் அரசியல் எந்தப் பக்கம் போகின்றது என்பது விளங்குகின்றது. அதற்காய் மற்ற அரசியல் கட்சிகள்  எல்லாம் சிறப்பானது எனச் சொல்ல வரவில்லை.

இந்த நாடு ஒரு சிறந்த நாடு, நீங்கள் கடினமாக உழைத்தால் உங்களுக்குரிய தடைகளைத்தாண்டி (இனவாதம், நிற வித்தியாசம்) என்பவற்றைத் தாண்டி உங்கள் கனவுகளைச் சாத்தியப்படுத்தலாம் என்று தொடர்ந்து வலியுறுத்தும் கப்பிட்டலிஸ்களின் கனடாக் கனவையே ரோயும் வெவ்வேறு பகுதிகளில் ஒரே குரலில் ஒலித்தபடி இருக்கின்றார்.

உலகில் பல நாடுகளை விடவும் கனடா ஒரு சிறந்த நாடென்பதில் எனக்குக் கூட மாற்றுக் கருத்தில்லை.  இலங்கையில் இருக்கும்   பேசும்/எழுதும்/நடமாடும் சுதந்திரத்தை விடப் பன்மடங்கு சுதந்திரம் கனடாவில் இருப்பதை,  ரோய் சொல்வதைப் போலவே நானும் உணர்கின்றேன்  என்பதும் உண்மைதான் ஆனால் கனடா வாழ்வதற்கு நல்ல நாடென்றால், ரோயைப் போல -எல்லோருக்குள்ளும் இனவாதம் இருக்கின்றது, எனவே வெள்ளையர்களை மட்டும் இனவாதிகள் எனச் சொல்லி எங்கள் பிள்ளைகளை வளர்க்கக் கூடாது என்று நமக்கு வலியுறுத்திச் சொல்பவர்- கனடாவில் இந்த வெள்ளையர்கள் இங்கிருக்கும் ஆதிக்குடிகளுக்கு என்ன செய்தார்கள்/செய்து கொண்டிருக்கின்றார்கள் என்பதைச் சொல்வதற்கும் நிறைய மெனக்கெட்டிருக்க வேண்டும். அதைப் பற்றிய எந்த சிறு சலசலப்பைக் கூட இங்கே காணவில்லை.  Systemic And Structural Racism கனடா அமெரிக்கா உள்ளிட்ட வட அமெரிக்கா நாடுகளில் நீண்டகாலமாய் தனி மனிதர்களைப் பாதிக்கின்றது என்பதை ரோய் எளிதாய்க் கடந்து போகவும் செய்கின்றார். ரோய் கனடா வந்தபோது உணர்ந்த இனவாதச் சொற்களைத்தான், அவரின் -இந்த நாட்டில் பிறந்த பிள்ளையும் இப்போது கேட்கின்றது என்றால்- இந்த நாடு ஏனின்னும் இவ்வாறான விடயங்களில் முன்னேறாமல் இருக்கின்றது என்றும் அவர் யோசிக்க வேண்டும் அல்லவா? ஆடைகளில் படும் அழுக்கைப் போல எளிதாக இவற்றைத் தட்டிக் கழித்து முன்னேறி விடவேண்டும் என்று ரோய் சொல்வது அநியாயமல்லவா?

இப்படிப் பார்ப்போம், நாளை இலங்கையில்  பெரும்பான்மைச் சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள், மலையகத்தமிழர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரோடு நல்லிணக்கம் செய்து நிம்மதியாக வாழ்கின்றார்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்படியெனில் சிங்கள மக்கள் தமிழ் மக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்குச் செய்த (ரோய் விவரித்தவை உட்பட) கடந்தகால வரலாற்றைச் சொல்லாமல், நினைவூட்டாமல் இலங்கை ஒரு சிறந்த நல்லிணக்க நாடு என்று நாளை சொன்னால் வரலாறு நம்மை மன்னிக்காது அல்லவா? அவ்வாறே கனடாவை அதன் சிறப்புக்களுக்காகப் போற்றும்போது அதன் கீழ்மைகளையும் நினைவூட்ட வேண்டும்.

அண்மையில் கூட ஆப்ரிக்காவிலிருந்து வந்த அகதிகளை உரிய வசதிகள் இல்லாது தெருக்களில் வாழவிட்டு நாமும், இந்த அரசும் அவர்களுக்கு அவலத்தைச் செய்தற்கு நாம் வெட்கித் தலைகுனிய வேண்டுமல்லவா? ஆகவேதான் கனடா ஒரு சொர்க்கபுரி என மட்டும் கட்டமைப்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும் எனச் சொல்கின்றேன். இந்த நூலைக்கூட ரோய் தனது அனுபவங்களோடு நிறுத்தியிருந்தால் நாம் இதையெல்லாம் பேசியிருக்க வேண்டியிருக்காது. கனடா ஒரு இனவாத நாடா, அப்படியா, இப்படியா என்று சில அத்தியாயங்களைப்  பெரும்பான்மைக் கனடியர்களை உச்சிகுளிரச் செய்ய எழுதியிருப்பதால்தான் நாம் அவர் எழுதிய ‘கனடா அனுபவங்களை’ இடைமறிக்க வேண்டியிருக்கின்றது.

ஓரிடத்தில் நான் மிகப்பெரும் விடுதலையை உணர்கின்றேன். அதைக் கனடா தந்திருக்கின்றது (i’m a free man) என்கின்றார். பிறகு இன்னொரு இடத்தில் கனடாவில் எப்போதும் நாம் போரிட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்கின்றார். போரிடுவதன் மூலமே நாம் வாழ்வின் அர்த்தத்தை விளங்கிக் கொள்ளலாம் எனவும் சொல்கின்றார். என் கேள்வி என்னவென்றால் ஒருவர் விடுதலை அடைந்தபின் எதற்காகப் போராட வேண்டும். ஏதோ ஒரு தளை/விலங்கு இருப்பதால்தானே தொடர்ந்து நாம் போராட வேண்டியிருக்கும்.  அப்படியெனில் பிறகு எப்படி ஒருவர் தன்னை விடுதலையானவராக உணர்கின்றேன் என்று எழுத முடியும்.

ரோயே, அவரது முப்பது வயதுக்குள் மியூட்சுவல் பண்ட்களில் முதலிட்டு மில்லியனர் ஆகிவிட்டேன் என்கின்றார். அதற்குப் பிறகு சில வருடங்களில் உலகப்பொருளாதார வீழ்ச்சியில் தனது வங்கிக் கணக்கு மைனஸுக்குப் போய்விட்டது என்றும் குறிப்பிடுகின்றார்.  அதனால் ஏற்பட்ட மனநெருக்கடிகளையும், வாழ்வாதாரச் சிக்கல்களையும் கூட விரிவாக விவரிக்கின்றார். மேலும் அவர் ஏணிப்படிகளில் ஒவ்வொரு உயரங்களை மேலே மேலே அடையும்போதும்   பல்வேறு போராட்டங்களாலேயே அந்நிலைகளை அடைகின்றார். ஒருவகையில் பார்த்தால் எப்போதும் போராடிக் கொண்டே  -பொருளாதாரம் உட்பட -பல விடயங்களில் ரோய்  இருக்கின்றார். அப்படியெனில் இவர் கனடா தனக்குத் தந்த விடுதலை என்று சொல்வதன் அர்த்தம் என்ன என்றே எமக்குக் கேள்விகள் எழுகின்றன.

இடைக்கிடையே புத்தர் இந்த வாழ்க்கையில் suffering தவிர்க்க முடியாது என்று சொன்னவர் என்றும் வாசிப்பவர்க்கு நினைவூட்டுகின்றார்.  புத்தர் suffering ஐ ரோய் சொல்லும் பொருளாதாரத்தை வைத்து மட்டும் சுருக்கிச் சொன்னவரில்லை. அவர் சொன்ன suffering, நாம் வயதாவது, நோயுறுவது, மரணமுறுவது என்ற விரிந்த தளத்தில் ஆகும். அந்த suffering ஐ நாம் ஒருபோதும் தவிர்க்க முடியாது, ஆனால் pain ஐ குறைக்க முடியும் என்றுதான் புத்தர் அவரடைந்த ஞானத்தின் மூலம் நமக்குப் போதிக்க விழைந்தார். அதில் ஒன்று பொருளாதாரம்/பணம் மட்டுமே வேண்டும் என்று  கடைசிக்காலம் வரை ஓடியோடி நம் வாழ்வைத் தொலைக்காதிருப்பதும் கூட. 

ரோய் ரத்தினவேல் என்ற பெயரோடு இந்த நூலைக் கேள்விப்பட்டபோது இந்தப் பெயரை எங்கேயோ முன்பு கேள்விப்பட்டிருக்கின்றேனோ என்ற யோசனை தோன்றியது. பின்னர் கொஞ்சம் தேடி/தோண்டிப் பார்த்ததில் இவர் இங்கிருக்கும் பலமான ஒரு நிறுவனமான கனடிய தமிழ் காங்கிரஸின் உபதலைவராக இருந்திருக்கின்றார் என்பது புலப்பட்டது. அத்தோடு ஈழ இறுதியுத்தகாலத்தில் இனத்துவேசத்தோடு நமது போராட்டத்தைப் பற்றி எழுதிய நாஷ்னல் போஸ்டில் அக்கருத்துக்களை மறுத்து opinions columns எழுதவும் செய்திருக்கின்றார் என்பதையும் அறிய முடிந்தது.

கனடிய தமிழ் காங்கிரஸிலிருந்து, சில பொது அரங்குகளில் இலங்கை அரசுக்கு எதிராக இறுதி ஈழ யுத்தகாலத்தில் பேசியதால், இலங்கை அரசால், இலங்கைக்குச் செல்ல தடைசெய்யப்பட்ட சிலரில் இவரின் பெயரும் இருந்தது (இப்போதும் இருக்கின்றதா தெரியவில்லை). ரோயுக்கு உண்மையான பெயர் வேறொன்று. அதை இணையத்தில் தேடினால் கிடைக்கும். அவரே அந்தப் பெயரை இங்கே பதிவு செய்துமிருக்கின்றார் என்பது வேறுவிடயம்.  அவ்வாறு தன்னை இலங்கையரசு தடை செய்தது தனக்குப் பெருமை என்கின்றார். இலங்கை அரசுக்கும் நாட்டுப் பொருளாதாரத்தை உயர்த்துவதை விட யாரை நாட்டுக்குள் விடக்கூடாது என்பதுதான் பெரும் பிரச்சினையாக இருக்கிறது. இப்போது கனடிய அமைச்சராகி விட்ட ஹரி ஆனந்த சங்கரிக்கும் இலங்கை செல்ல பயணத்தடையை அந்த அரசு நீண்டகாலமாக விதித்து வைத்திருக்கின்றது. வேறொன்றுமில்லை ஹரி தொடர்ச்சியாக இலங்கையரசு செய்த தமிழினப் படுகொலைகளைப் பற்றி பல்வேறு தளங்களில் பேசிக்கொண்டிருக்கின்றார் என்பது மட்டுமே இதற்குரிய காரணம்.

ரோயின் இந்தப் புத்தகத்தை யாருக்காவது வாசிக்கப் பரிந்துரைப்பேனா என்றால் நிச்சயம் செய்வேன் என்றே சொல்வேன். இதில் சொல்லப்பட்ட அனுபவங்கள் முக்கியமானவை. ஆனால் ஒரு தனி மனிதரின் அனுபவம் என்று மட்டுமே நினைத்து வாசியுங்கள் என்றே அவர்களுக்கு ஞாபகமூட்டுவேன். முக்கியமான இங்கே பிறந்த அடுத்த தலைமுறையினரான என் அண்ணாவின் பிள்ளைகளை இதில்  இலங்கையில் நடந்த போர் உள்ளிட்ட கனடாவில் பெற்ற பல்வகைப்பட்ட அனுபவங்களுக்காய் வாசிக்கப் பரிந்துரைப்பேன்..

கிட்டத்தட்ட என் நெருங்கிய உறவுகளின் ஒருவரின் வயதையொத்தவரே ரோய். ரோய் கனடாவுக்கு வந்து ‘உயர்ந்தது’ ஒருவகை என்றால், என் நெருங்கிய உறவுகளைப் போன்றவர்கள் உக்கிரேன் போன்ற பனிநாடுகளில் சிக்கி, கனடாவின் வடபகுதியில்  ஆவணங்களின்றி அகதியாய்  வந்திறங்கி,  உரிய சாப்பாடில்லாது  இரண்டு நாட்களாய் புகைவண்டியில் பயணித்து குளிர்காலத்தில் ரொறொண்டோவில் வந்திறங்கியது என்று அவர்களுக்கும் சொல்ல வேறு விதமான கதைகள் இருக்கும். அவ்வாறு ஒவ்வொருவரின் கனடா வந்த கதையும், கனடாவில் அவர்கள் தத்தளித்து  எழுந்த கதைகளும்,  இன்னமும் தத்தளித்துக் கொண்டிருக்கும் கதைகளுமெனப் பல்லாயிரம் இருக்கும்.

ஒருவகையில் ரோய் இந்த நூலின் பிற்பகுதியில் நமக்குத் திணிக்கச் செய்வது, இந்தியா/இலங்கையில் தலித்துகளிடமும், அமெரிக்கா/கனடாவில் கறுப்பர்களிடமும், உங்களுக்குத்தானே இப்போது படித்து, கடினமாக வேலை செய்து முன்னேற ஒரு தடையும் இல்லையே, பிறகேன் இந்த நாட்டை நீங்கள் எப்போதும் குற்றஞ்சாட்டிக் கொண்டிருக்கின்றீர்கள் என்று கேட்பதைப் போன்றதாகும்.

ஒருவரின் வெற்றிக்கதை (அல்லது அவ்வாறாக நம்புகின்ற) எல்லோரினதும் கதையாகாது; எதையும் பொதுமைப்படுத்தல் ஆபத்தானதாகவே முடிந்துவிடும். அந்த வித்தியாசங்களைப் புரிந்து கொள்ள மறுப்பது என்பது பிறரின் குரல்களை நசுக்குவதைப் போன்றதாகும். ஒருவகையில் இதைத்தான் நமக்கு இந்த முதலீட்டிய நாடுகள்  ‘அமெரிக்கக் கனவு’ என்று சொல்லி சொல்லி நம்மை உசுப்பேற்றிக் கொண்டிருக்கின்றது. அந்தக் குரலை ரோயின் பிற்கால கனடா அனுபவங்களில் அடிக்கடி கேட்பது சலிப்பூட்டுகின்றது. அதைத் தவிர்த்திருந்தால் இந்த நூல் இன்னும் சிறப்பானதாக ஆகியிருக்கும். ஆனாலும் அதன் முதற்பகுதி போர்க்கால நினைவுகளாலும், ரோயின் தனிப்பட்ட  கனடா அனுபவங்களினாலும் இது ஒரு முக்கியமான நூல் என்பதில் எந்த மாற்றுக் கருத்துமில்லை.

*******************

(Prisoner # 1056: How I survived Was and Found Peace by Roy Ratnavel)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.