Tag: மேரி ஆலிவர்

மேரி ஆலிவர் கவிதைகள்

கற்களால் உணரயியலுமா? கற்களால் உணரயியலுமா? அவர்கள் தங்கள் வாழ்க்கையை நேசிக்கிறார்களா? இல்லை அவர்களின் நிதானம் எல்லாவற்றையும் அமைதியடையச் செய்துவிடுமா? நான் கடற்கரையில் நடக்கும்போது வெள்ளை நிறத்தில், கறுப்பில் எனப் பல வண்ணங்களில் சிலவற்றைச் சேகரிக்கிறேன். கவலைப்பட வேண்டாம், நான் உன்னைத் திரும்பவும் கொண்டு வந்து விட்டுவிடுவேன் என்கிறேன் பிறகு அவ்விதமே செய்கிறேன். மரம் தனது பல கிளைகளை உயர்த்தி உவகையடைகிறதே, ஒவ்வொரு கிளையும் ஒரு கவிதையைப்போலவா? முகில்கள் தங்களது மழைமூட்டையை அவிழ்த்துவிடுவதில் மகிழ்ச்சியடைகின்றனவா? உலகத்தில் பெரும்பாலானவர்கள் சொல்கிறார்கள், இல்லை, இல்லை, அது சாத்தியமேயில்லை என்று. நான் அத்தகைய முடிவை எண்ணிப்பார்க்கவே மறுத்துவிட்டேன். ஏனெனில் அது மிகப் பயங்கரமானதாக இருக்கும், மேலும் தவறாகவும். ** நான் கடற்கரைக்குச் சென்றேன் நான் காலையில் கடற்கரைக்குச் சென்றேன் நேரத்திற்கேற்ப அலைகள் வந்துபடியும் சென்றபடியும் இருந்தன, ஓ, நான் சோகமாக இருக்கிறேன் என்ன செய்யட்டும்— நான் என்ன செய்ய வேண்டும்? என்கிறேன். தன் அழகிய குரலில் கடல் சொல்கிறது: மன்னிக்கவும், எனக்கு வேலை இருக்கிறது. ** எப்போது அது நிகழ்ந்தது? எப்போது அது நிகழ்ந்தது? “நிறையக் காலத்திற்கு முன்பு” எங்கு நிகழ்ந்தது? “தூராதி தூரத்தில்” இல்லை, சொல், எங்கு நிகழ்ந்தது? “எனது இதயத்தில்” இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறது உனது இதயம்? “நினைத்துப்பார்த்த படியிருக்கிறது, நினைத்துப்பார்த்தபடியிருக்கிறது!” **   இந்தக் காலையில்  இந்தக் காலையில் செங்குருவிகளின் முட்டைகள் பொரிந்துவிட்டன மேலும் ஏலவே குஞ்சுகள் உணவுக்காகக் கீச்சிட்டுக்கொண்டிருக்கின்றன. அவர்களுக்குத் தெரியாது உணவு எங்கிருந்து வருகிறது என்று, வெறுமனே கத்திக்கொண்டிருக்கிறார்கள் “மேலும்! மேலும்!” வேறு எது குறித்தும்,...