சிபுயா கிராஸிங்க்


1

து மட்டும் தயைகூர்ந்து வேண்டாம் என்று திரும்ப திரும்ப நினைத்துக் கொண்டிருக்கும்போதே, அந்த காட்சி விரிந்தது. அகலமான சிபுயா கிராஸிங்.  சிபுயா ரயில் நிலையத்தை விட்டு, வெளியே வந்தவுடன் எதிரில் குறுக்கும் நெடுக்குமாக ஐந்து மிகப்பெரிய நடைபாதைகள். எதிரில் மிகப்பெரிய திரைகளில் கார்ட்டூன் ஓடிக்கொண்டிருந்தது. திரையின் ஓரத்தில் 7.30 என்று கடிகாரம் மணி காட்டியது. பச்சை விளக்கெரிந்ததும், நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும், கறுப்பு கோட்சூட், வெள்ளை சட்டை அணிந்து, தோளில் தொங்கும் அலுவலக பையுடன்,  வேகம்வேகமாக நடந்து செல்லும் அந்த காட்சி படர்ந்தவுடன், தொப்பலாக வியர்வையில் நனைந்து போனான் ரிக்கு. வாய் உலர்ந்திருந்தது.  இதயதுடிப்பு அதிகமானது. வேகமாக நடந்து கொண்டிருந்த நபர்கள் திடீரென்று ரிக்கு நின்று கொண்டிருந்த இடம் நோக்கி திரும்பினார்கள்.

“லொடக், லொடக்” என்று சத்தம் வந்தது. எங்கிருந்து சத்தம் வருகிறது என்று யோசித்தான் ரிக்கு.  திரும்பவும் அதே சத்தம். இந்த முறை பலமாக வந்ததும் சத்தத்தில் உலுக்கப்பட்டு இதுவரை கண்ட கனவிலிருந்து இந்த சத்தம் வரவில்லையென்பதை உணர்ந்து எழுந்தமர்ந்தான் ரிக்கு.  எப்போதும் போல் ”சிபுயா கிராஸிங்” கனவுதான் என்று ஒரு நிம்மதி பரவியது. திரும்பவும், லொடக் லொடக் என்று கதவு உலுக்கபடும் சத்தம். ஒரு பக்கம் தன்னை கொடுங்கனவிலிருந்து மீட்ட சத்தம் என்று மிக நெருக்கமாக அதை உணர்ந்தான். திரும்பவும் அதே சத்தம் கேட்டபோது எரிச்சலுற்றான். மூன்றாவது நாளாக இதே சத்தம். நிச்சயம் மணி காலை ஏழரை ஆகி இருக்கும்.

மண்டையில் ஒலித்தது அந்த சத்தம். மெதுவாக எழுந்து நேரெதிரே இருந்த திரைச்சிலையை நோக்கினான். ஒருபக்கமாக அதை ஒதுக்கி வெளியே பார்த்தான். கண்கள் கூசியது. அதை மீறி எழுந்த ஒலி மண்டைக்குள் ஒலித்தது. சூரிய ஒளிக்கு கண்கள் பழகியபின் காட்சி தெரிந்தது. எதிர்வீட்டின் வாசலில் அந்த பெண் கதவை உலுக்கிக் கொண்டிருந்தாள். கதவைப் பூட்டிவிட்டு சத்தம் எழும்பும்படி உலுக்கி, பூட்டியிருக்கிறதா என்று பார்த்தாள். பிறகு தோளில் தொங்கும் பையில் சாவியை பத்திரப்படுத்தினாள். படிகளில் இறங்கி சைக்கிள் நிறுத்தியிருக்கும் இடத்துக்கு வந்தாள்.  மிதிவண்டியின் ஸ்டாண்டை தள்ளி சைக்கிளை நகர்த்தினாள்.  பிறகு திரும்பவும் ஏதோ மறந்தவள் போல், சைக்கிளை நடுப்பாதையில் நிறுத்திவிட்டு மேலே ஏறி, பையிலிருந்து சாவியை எடுத்து பூட்டிய வீட்டை மறுபடியும் பூட்டினாள். அதே போல் உலுக்கி மூடியிருக்கிறதா என்று பார்க்கத் தொடங்கினாள்.

ரிக்கு, நடந்துவந்து மெத்தையில் அமர்ந்தான். மூன்றாவது நாளாக இது நடக்கிறது. இனி குறைந்தது பத்து நிமிடம் இதே போல் பூட்டுவதும், கதவை உலுக்கி சரிபார்ப்பதும் நடக்கும்.  ரிக்கு சோர்வாக உணர்ந்தான். எந்த நேரத்தில் விழிக்க கூடாதோ,  அந்த நேரத்தில் மூன்று நாட்களாக அந்த பெண் எழுப்பியிருந்தாள். முன்பெல்லாம் மதியம் பன்னிரெண்டு மணிக்கு குறைந்து ரிக்கு எழுவதில்லை.  விழிப்பு வந்தவுடன் படுக்கையில் படுத்தபடி அறைக்கு வெளியே கேட்கும் பாட்டியின் காலடியோசையை கூர்ந்து கவனிப்பான். அவள் காலில் செருப்புடன் நடக்கும் ஓசை கேட்டபின்பே, மனம் அமைதியடையும்.  ஓரிரு நிமிடங்கள் அந்த ஓசை வர தாமதித்தால்,  என்னவானது என்று மனம் பரபரப்படையும். ஒருவேளை,  அவள் இறந்திருந்தால் என்ன செய்வது என்ற கேள்வி எழும். சில நிமிடத்தில்,  சமையலறையில் அவள் தண்ணீர் திறக்கும் ஒலியெழும். உடனே,  மீண்டும் அதே போல் ஒரு நாள்,  என்கிற உணர்வு ஒரே நேரத்தில் மகிழ்ச்சியையும்,  அலுப்பையும் கொடுக்கும்.

இன்று அறைக்கு வெளியே பாட்டியின் ஓசை இல்லை. தாளில் செய்யப்பட்ட அந்த கதவை ஒருபக்கமாக மெதுவாக தள்ளி வெளியே பார்த்தான். பாட்டி இல்லை.  குப்பை வைக்க வெளியே சென்றிருப்பாள். வெளியே நடந்து கழிப்பறைக்கு சென்று வந்தான். திரும்ப வந்தபோது அறையின் வாயிலில்  கடிதம் வைக்கப்பட்ட வெள்ளை உறையை பார்த்தான்.  இதோடு ஒரு மாதமாக இப்படி கடிதம் வைக்கப்படுகிறது. எட்டு வருடங்களுக்கு பிறகும், தன்னை மீட்டுவிடமுடியும் என்று நம்பும் பாட்டியை நினைத்து உள்ளுக்குள் வருந்தினான்.  பாட்டியின் ஏற்பாட்டில், இப்படி தன்னை தொடர்புகொள்ள முயலும் வாடகை சகோதரிகள்,  இதற்கு முன்பும் இப்படி செய்ததுண்டு. பெரும்பாலும், மூன்று மாத காலம், வாராவாரம்,  வீட்டுக்கு வந்து அறைக்கு வெளியே கடிதம் வைப்பார்கள். எந்த பதிலுமில்லையென்றால், கதவை தட்டிப்பார்ப்பார்கள். ரிக்கு திட்டத் தொடங்கியவுடன் சத்தமில்லாது வெளியேறிவிடுவார்கள்.  ரிக்குவை போல் ஒரு அறைக்குள் தமது வாழ்க்கையை சுருக்கிக் கொண்டவர்கள் ஜப்பானில் பதினைந்து லட்சத்துக்கும் மேல் ஆனபோது  இத்தகைய சேவை இயக்கங்கள் தோன்றின. இப்போது முயலும் பெண் யாரென்று தெரியவில்லை.

இப்படியே தன்னை விட்டுவிடுவதில் யாருக்கு என்ன பிரச்சினையென்று யோசித்தான் ரிக்கு. பாட்டிக்குப் பின்னான தனது வாழ்க்கை குறித்தே பாட்டி கவலைப்படுகிறாள். ரிக்குவுக்கும், அது பயம் தந்தது. டோக்கியோவிலிருக்கும் தந்தை மாதமாதம் பணம் பாட்டிக்கு அனுப்பிவிடுகிறார். தாய் எங்கிருக்கிறாள் என்றே தெரியவில்லை. அறையின் மூலையில் கிடந்த கிடாரை பார்த்தான் ரிக்கு. பள்ளி மாணவனாக கிடார் கற்றுக் கொள்ளவேண்டும் என்று சொன்னபோது தந்தை உற்சாகமாகவே ஆசிரியருக்கு ஏற்பாடு செய்தார். பிறகு அதில் மூழ்கி கிடந்தபோது கிடாரின் காரணமாகவே படிப்பில் கவனம் குறைகிறது என்று எரிச்சலுற்றார். தன்னைப்போலவே நன்கு படித்து டோக்கியோ பல்கலைகழகத்தில் ரிக்கு படிக்கவேண்டும் என்று ஆசைப்பட்டார். தாய் கோசேகியும் டோக்கியோவில் ஒரு பெரிய நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்தாள். தந்தையும், தாயும் சந்தித்துக் கொண்டதே,  ஆராய்ச்சி படிப்பில் இருந்தபோதுதான். மாணவனாக இருக்கும்போது வீட்டுக்கு வரும் தந்தையின் நண்பர்கள், இரண்டு டின் அசாஹி பீர் குடித்தவுடன் ரிக்குவும் டோக்கியோ பல்கலைகழகத்தில் படித்து பெரிய நிறுவனத்தின் நிர்வாகப் பொறுப்புக்கு வரவேண்டுமென்றார்கள்.

பள்ளியிலேயே பிரச்சினைகள் ஆரம்பித்துவிட்டன. ரிக்கு கிடார் வாசிக்கவந்தால் மட்டும் ஓவென்று கத்தி கூச்சலிட்டனர். பெண்கள்,  தான் நடந்துசென்றபின் உரத்தகுரலில் சிரிப்பது ஏன் என்று புரியாமல் தூக்கமிழந்தான் ரிக்கு. பள்ளி முடிந்தவுடன்,  குமோன் போகவேண்டுமென்று சேர்த்துவிட்டாள் அம்மா. அங்கு திரும்ப திரும்ப கணக்குகளை வேகமாக போட பயிற்சியளித்தார்கள். தடிமனாக கண்ணாடி போட்ட ஆசிரியர் யோசிதா, உரத்தகுரலில்,  தவறாக போட்ட கணக்கு குறித்து திட்டுவது, அவ்வபோது கனவில் வருவதுண்டு.

பள்ளியை முடிப்பதே பெரும்பாடாக இருந்தபோது, டோக்கியோ பல்கலைக்கழகமெல்லாம் செல்வது குதிரைக்கொம்பு, என்பதை தந்தை உணர்ந்த அன்று அவர் நம்பிக்கையிழந்திருக்கக் கூடும். தன்னை முட்டாள் என்று திட்டத்தொடங்கியது அதற்குபிறகுதான். அம்மாவும், அப்பாவும் பிரிந்தது கூட தன்னை முன்னிட்டுதான், என்று காட்டிக்கொண்டார்கள்.

காலை ஏழரை மணியை, எப்படியாவது கடந்து விடவேண்டும் என்று நினைப்பான் ரிக்கு. தொடர்ந்து, இப்படி கதவைப் பூட்டிவிட்டு, மறுபடி, மறுபடி அதை இழுத்து பார்த்து சத்தம் எழுப்பி, மூன்று நாட்களாக எதிர்வீட்டு பெண் எழுப்பிக் கொண்டிருந்தாள். எழுந்தபின், கடிகாரம் பெரிய எதிரியாக மாறி முள்ளின் ஒவ்வொரு அசைவும், தான் மறந்துபோன எட்டாண்டுகளுக்கு முன்பான வாழ்க்கையை, ஞாபகப்படுத்திக் கொல்லும்.  ஒரு தனியார் பல்கலைகழகத்தில் உலக அரசியலை முக்கியப்பாடமாக எடுத்து எப்படியோ அதை முடித்த பின், வீடுகளில் பயன்படுத்தப்படும் மர மேஜை நாற்காலிகள் தயாரிக்கும் நிறுவனத்தில் முதல்வேலை கிடைத்தது. பிலிப்பைன்ஸிலும், தாய்லாந்திலும் இருக்கும் விவசாயிகளிடமிருந்து அடிமாட்டுவிலைக்கு மரங்களை வாங்கி, அங்கேயே வேலைபாடுகளுடன் கூடிய தளவாடங்களாக உற்பத்திசெய்து, கப்பலில் கொண்டுவந்து கொள்ளை லாபத்துடன் இங்கு விற்கும் வேலை.

ரிக்குவின் வேலை, கப்பலில் வரும் பொருட்களை துறைமுகத்தில் இறக்குமதி செய்து அதற்குண்டான அரசாங்க பேப்பர்ஸை தயார் செய்யும் துறையில் குமாஸ்தா. ஒரு வருடமே வேலை பார்த்தான் ரிக்கு. காலை ஏழரை மணிக்கு பாட்டியின் வீட்டிலிருந்து கிளம்பி, டோக்கியோ சென்று அங்கிருந்து ஒரு மீண்டுமொரு ரயில் பிடித்து சிம்பாசி செல்லவேண்டும். பாட்டி வீடு இருந்த கசாய் ரயில் நிலையத்தில் ஏழரை மணிக்கு சென்று டோக்கியோ செல்லும் ரயில்கள் நிற்கும் தளத்தின் வரிசையில் நின்றால், மூன்று ரயில்களுக்கு பின் ரிக்குவின் முறை வரும்.

இதற்கெனவே உள்ள ரயில்வே ஊழியர்கள் ரயில் வண்டியில் ஒவ்வொரு வாசல் அருகே நிற்பார்கள். ரயில் வந்து நின்று, வாசல் கதவு திறந்தவுடன்,  இருபக்கமும் கூட்டம் தள்ளிக்கொண்டு ஏற முற்படும்.  ஒரு நிமிடம் மட்டுமே நிற்கும் அந்த ரயிலின் ஒவ்வொரு வாசலிலும் ஒரு நூறுபேர் ஏற முயல்வார்கள். ஏறியும் ஏறாமலும் அந்தரத்தில் நிற்கும் மனிதர்களை உள்ளே தள்ளுவதுதான் அந்த ஊழியர்களின் வேலை. ரிக்கு உள்ளே நுழைந்தவுடன், எப்படியாவது தள்ளிக்கொண்டு இருக்கைகள் இருக்கும் வரிசையில் ஏதாவது ஒரு இருக்கையின்முன் செல்ல விரும்புவான். அந்த இடம் மட்டுமே அடுத்துவரும் நிறுத்தங்களில் தவறுதலாக வெளியே தள்ளப் படுவதிலிருந்து காக்கும்.

முதியவர்கள், கர்ப்பிணிகளுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் முன்னுரிமை இருக்கைகளில் உட்கார்ந்திருப்பவர்கள் பெரும்பாலும் தூங்கும் பாவனையில் இருப்பார்கள். அதுவே கண்ணெதிரே வந்து நிற்கும் முதியவர்களுக்கு எழுந்து இடம் கொடுக்காமலிருக்க உதவும். இப்படி இருக்கை சுகமெல்லாம் வண்டி புறப்படும் முதல்நிறுத்தத்தில் ஏறும் பயணிக்களுக்கானது. ரிக்கு போன்றோர் ஏறும் நிறுத்தங்கள் இப்படி இருக்கைகள் முன்நிற்கும் வாய்ப்பிருந்தாலே அதிர்ஷ்டம் என சொல்லதக்கவை.

அப்படித்தான், அன்று வரிசையில் நின்று மூன்றாவது ரயிலில் ஏற்றப்பட்டபோது, சுவாசிக்கும் மூட்டைபோல் உணர்ந்தான் ரிக்கு. திடீரென்று பின்புறம் இருதோளிலும் கம்பிவைத்து குத்தியது போல் வலி ஊடுருவியது. எதனால் வலி என்று திரும்பிப் பார்க்க கூட இடமில்லாத கூட்டம். நகர்ந்து நிற்க முயற்சித்தபோது அருகிலிருந்தவர் உச்சு கொட்டினார். கோட்சூட்டையும் தாண்டி குத்தல் வலி ஊடுருவியது. அதற்குபின் வந்த நிறுத்தத்தில் பின்புறம் நிற்பவர் இறங்கிவிடக்கூடும் என்று பல்லைக் கடித்துக்கொண்டு நின்றிருந்தான். மூன்று நிறுத்தங்களில் அவர் இறங்குவதாக இல்லை. பத்து நிமிடத்திற்குபின் வந்த நான்காவது நிறுத்தமான கயபாச்சோவில் நிறையபேர் இறங்கினார்கள். இவனும் இறங்கி வலதுபக்க கதவு அருகே நின்று கொண்டான். இவனுக்கு பின் இருந்த ஐம்பது வயது ஆள், தோளில் கறுப்புநிற  டியுமி அலுவலக பை மாட்டியிருந்தார்.  தலைமுடி நல்ல கருமையுடன் முன்பக்கம் சரிந்து விழுந்திருந்தது கண்கள் தூக்கத்தில் இருப்பவர் போல் சொருகியிருந்தது.  இரு கையையும் முன்பக்கம் மடக்கி, நடுவிரலை மட்டும் முன்னோக்கி குத்துவது போல் வைத்தவண்ணம் இறங்கினார். வலியின் காரணம் ரிக்குவிற்கு புரிந்தது.

புதன்கிழமை காலை, அலுவலகம் செல்லும் ரயிலில், தனக்கு எந்தவிதத்திலும் சம்பந்தப்படாத ஒருவனை இப்படி குத்தித் தள்ளி வெளியே வைத்திருப்பவரை பற்றி யோசித்தான், ரிக்கு. எவ்வளவு கூட்டத்திலும் தன்னை யாரும் நெருங்கிவிடக்கூடாது என்று நடுவிரலால் தனக்குத் தானே அவர் வரைந்துக்கொண்ட வட்டம். கண்ணுக்கு தெரிந்தது. இந்த நகரத்திலுள்ள அனைவரும் இது போன்ற ஒரு வட்டத்தை வரைந்தே வைத்துள்ளனர். ஒருபோதும் மற்றொருவரை அதற்க்குள் விடுவதில்லை. தோள்பட்டை இன்னும் வலித்தது. கண்ணீர் வழிந்தது. மூடப்போகும் கதவின் வெளியே நின்றுக்கொண்டிருந்த ரிக்கு, ரயிலுக்குள் திரும்பவும் ஏறாமல், கண்ணீர் வடித்தபடி எதிர்பக்கம் வீட்டுக்கு திரும்பிச் செல்லும் ரயிலில் ஏறுவதற்கு நடந்தான். அன்று முதல் அவன் வேலைக்கு செல்வதில்லை

பாட்டிக்கு எதிர்வீட்டுப்பெண் பற்றி தெரிந்திருக்கும் என்று நினைத்தான் ரிக்கு. பாட்டி அதிகம் வெளியில் செல்பவளல்ல. ஆனால் அவளால் வீட்டுக்குள் இருந்தபடி, தெருமுனையில் எப்போதும் குடித்துவிட்டு நள்ளிரவில் வீடு திரும்பும் இதாபாஷி சென்ற வாரம் இறந்துவிட்டதை கூறமுடியும். பக்கத்துவீட்டு சிக்கியின் பூனை காணாமல் போனதை பற்றி வருந்தமுடியும். அவள் எல்லாவற்றையும் அறிந்து வைத்திருப்பவள் ஆனால், அவளிடம் எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்று யோசித்தான் ரிக்கு.

வீடியோ கேம்ஸ் விளையாடினான். எழுந்து வந்து கப் நூடுல்ஸில் வெந்நீர் ஊற்றி சாப்பிட்டான். மணி பத்தரையை தாண்டவில்லை. தலை வலித்தது. அந்த எதிர்வீட்டு பெண் மீது கோபம் வந்தது. சென்ற வாரம் வரை இந்த தொல்லை இல்லை. புதிதாக குடிவந்திருக்க வேண்டும். இதற்கு முன்பு காலியாக இருந்தது இந்த இடம். இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்த இடத்தில் யமாசித்தா தாத்தா தனியாக வசித்தார். ஒரே மகன் ஒகினாவா தீவில் வேலை பார்த்தார். வருடத்துக்கு ஒரு முறை குடும்பத்துடன் வந்து செல்வார். பகல்நேரங்களில், அவர் ஏற்பாடு செய்திருந்த முதியோர் காப்பக ஆசாமிகள் வேனில் வந்து அழைத்துச் சென்று மாலை கொண்டுவந்துவிடுவார்கள். இரண்டு நாட்களாக அவர் வராதது கண்டு,  அவர்கள் ஆம்புலன்ஸுக்கு தகவல் அனுப்பிவிட்டு வீட்டை திறந்து பார்த்தபோது படுக்கையில் இறந்துகிடந்தார் யமாசித்தா தாத்தா. அவருடைய வளர்ப்புப் பூனை அருகில் அமர்ந்திருந்ததாம்.  அவருக்கு பின் இந்த இடத்தை விற்றுவிட்டு மகன் சென்றுவிட,  புதியதாக வாங்கிய கட்டுமான நிறுவனம் ஆறு வீடுகளாக மாற்றி விற்றது. இதில் கீழ்தளத்தில்தான் இந்த பெண் வசிக்கிறாள். இவள் மட்டும்தானா, அல்லது வேறு யாரும் இருக்கிறார்களா, எங்கு வேலை பார்க்கிறாள்  திரும்பத் திரும்ப ஏன் பூட்டுகிறாள், பாட்டிக்கு மட்டும் என்ன தெரியும் என்று நினைத்துக்கொண்டான் ரிக்கு.

[ads_hr hr_style=”hr-dots”]

2

யுகிகோ மழையை பார்த்துக் கொண்டு படுத்திருந்தாள். கண்ணாடி கதவின் ஓரத்தில் குளிர் இருந்தது. முற்றிலும் தன்னை போர்வைக்குள் நுழைத்துக்கொண்டு, கதவுக்கு வெளியே சீராக பெய்யும் மழையின் ஓசை கேட்பது மனதுக்கு இதமானதாக இருந்தது. மழைநாட்களின் ஈரம் பெரும்பாலும் பள்ளிக்கால நினைவுகளுக்கு கொண்டு செல்லும்.  அப்போது அரகவா ஆற்றின் ஓரத்தில் அவர்களது பூர்வீக மர வீடு இருந்தது.  நாற்பது வருடங்களுக்கு முன் யுகிகோவின் தாத்தாவால் கட்டப்பட்ட வீட்டின் தோட்டத்தில் சகுரா மரங்கள் இருந்தன.  அந்த மலர்கள் பூக்கும் காலத்தில், ஆற்றின் ஓரத்தில் நடைக்கு செல்பவர்கள் நின்று பார்ப்பது, யுகிகோவிற்கு பெருமையாக இருக்கும். தனது சுமி பூனைக்குட்டியுடன் பெருமையாக வெளியே நிற்பாள். யுகிகோவின் தாய் ஜப்பானிய மேளம் கற்றுக்கொடுக்கும் ஆசிரியை.  மாலைவேளைகளின் அவள் அருகிலிருக்கும் சமூக கூடத்தில் குழந்தைகளுக்கு மேளம் கற்றுக்கொடுக்க சென்று விடுவாள். தந்தை நக்கமுராவின் வேலை பற்றி பள்ளியில் கேட்கும்போது ஜப்பானிய உணவகம் வைத்திருக்கிறார் என்று பெருமையாக சொல்வாள்.  அந்த உணவகம் எங்கிருக்கிறது என்று யாரேனும் கேட்டால், முடிந்தவரை அந்த முகவரியை தவறாகவே சொல்வாள்.   பன்னிரெண்டு மணிக்கு திறந்து காலை ஏழு மணிக்கு மூடப்படும் உணவகத்தை எப்படி பள்ளியில் விவரிப்பது என்று புரியாமல் விழிப்பாள்.

இந்த மழையில் தேநீர் அருந்தினால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. எழுந்துசென்று நீர் கொதிக்கவைத்து, பச்சைத் தேயிலையை வடிகட்டியில் போட்டாள். நன்கு கொதித்தவுடன், ஒரு பீங்கான் கோப்பையில் வடிகட்டியை இட்டு, அது நிறையும் வரை நீர் ஊற்றினாள். கையில் தேநீரை எடுத்துக்கொண்டு திரும்பவும் கண்ணாடி கதவின் அருகே வந்தமர்ந்தாள்.

நொபுதோமோ இப்போது எங்கிருப்பான்? அவன் திருமணம் ஒகினாவாவில் நிகழ்ந்ததாக ஷிக்கி சொன்னாள். அவன் அழைப்பு தரவில்லை. பள்ளி நாட்களுக்கு பின் பெரும்பாலான நட்பு அறுந்துவிட்டது. ஒன்பதாவது படிக்கும்போது, முதன்முதலாக நொபுதோமோ வீட்டுக்கு அழைத்துச் சென்றான்.  அழகான தனி வீடு.  அவன் தந்தை ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்கிறார். நொபுதோமோவுடன் சென்றபோது, அவனது தந்தை வீட்டு ஹாலில் கணிப்பொறி இயக்கிகொண்டிருந்தார். அறிமுகபடுத்தியபோது சிரித்தார்.  மேலே அவனது அறைக்கு சென்று பள்ளி பாடங்கள் செய்கிறோம் என்று அவன் சொன்னபோது,  சத்தம் அதிகம் செய்யவேண்டாமென்று கண்ணடித்து சொன்னார்.  நொபுதோமோவின் வாசம் ஞாபகத்துக்கு வந்தது. தொடர்ந்து அவனது மெத்தையின் ஸ்பரிசம். அவன் அணிந்திருந்த உள்ளாடையில் மிக்கி மவுஸின் படம். அதை பரிகாசம் செய்ததும்,  வெட்கத்தில் சிவந்த அவன் முகம்.  முதன்முதலாக ஒரு ஆணுடல் அறிமுகமானது அன்றுதான்.  ஒரு வருடத்தில் அந்த உறவு பிரிந்தது.  உண்மையில் அந்த உறவு அவ்வளவு நாட்கள் நீடிக்க காரணமே கூட நொபுதோமோ தான்.

யுகிகோவின் உயரமும், உடல்வாகும் பள்ளியில் பிரபலமாக காரணம். எந்த பையனும் அவளிடம் பழக விரும்புவான். யுகிகோவின் தோழிகள் நொபுதோமோவை விரும்பினார்கள். அதனாலயே யுகிகோ, அவன் மீது நாட்டம் கொண்டாள். அவனை வென்றெடுத்தபின், அது சலிப்பாக மாறியிருந்தது. ஒரு மாடல் ஆகிவிடுவோம் என்று வெகு நிச்சயமாய் நம்பிக்கொண்டிருந்த காலம் அது. படிப்பில் கவனம் நிலைக்கவில்லை. எங்கு சென்றாலும், ஆண்கள் உற்றுநோக்கினர். தோழிகளுடன் பள்ளி முடிந்தபின் சுற்றுவதற்காகவே பள்ளிக்கு சென்றாள். பள்ளி திடீரென்று முடிந்தபின்பு, செய்வதற்கு எதுவுமில்லாது திகைத்தாள்.

நொபுதோமோ, எப்போதாவது என்னை பற்றி நினைப்பானா? யார் கண்டது என் படங்களை கூட அவன் பார்த்திருக்ககூடும். என்னுடன் கொண்ட முதல் உறவு பற்றி பெருமையாக நினைத்திருப்பானா? பள்ளி முடித்தவுடன் அவனுக்கு டோக்கியோ பல்கலைகழகத்தில் இடம் கிடைத்தது. பாரிஸ் சென்று சில வருடம் கட்டிட பொறியாளராக  பணிபுரிந்தான். அவன் மனைவி என்னை விட அழகாக இருப்பாளா? தெரியவில்லை. பள்ளி நட்பில் ஓரிருவருக்கு அவன் அழைப்பு விடுத்திருக்ககூடும். அவர்கள் யாருடனும்  தொடர்பில்லை. ஆனால் ஒருபோதும் அவன் மனைவியிடம், யுகிகோவை தெரியுமென்று அவன் சொல்லபோவதில்லை என்று நினைத்தபோது கண்ணீர் துளிர்த்தது.

தன்னுடைய புகைப்படங்களை பார்த்துவிட்டு, இயக்குனர் ஷிமோமுரா அழைத்தபோது ஷிக்கியும் கூட வந்தாள். டெஸ்ட் சூட் எடுத்தபோது கூட கேமரா முன் தன்னுடைய உடலை காட்டுவதில் பெருமையே இருந்தது.  அவ்வளவு எளிதாக ஷிமோமுரா யாரையும் அழைப்பதில்லை என்று வரவேற்பறைப் பெண் சொன்னாள்.  முதல் ரெக்கார்டிங்கிற்கு சென்ற நாள் நினைவில் இருக்கிறது.  கோட்சூட் அணிந்து வந்த சுஷுகி, முறையாக வணக்கம் செலுத்தி, ”உங்களுடன் பணிபுரிவதில் மகிழ்ச்சி” என்று சொல்லிச் சென்றான். பள்ளி மாணவிக்குண்டான சீருடையில் யுகிகோ உள்ளே வரவேண்டும். அந்த அறையில் சுஷுகிதான் கணித ஆசிரியர். வகுப்பறையில், யாருமில்லாததை கண்டு யுகிகோ தயங்கி நிற்பாள்.  அவள் கையை பிடித்து அழைத்துச் சென்று,  இன்று வேறு பாடங்கள்  எடுக்க இருப்பதாக சொல்வான் சுஷுகி. பிறகு, மெதுவாக பள்ளி மேஜையில் அவளை உட்காரவைத்து, ஆடைகளை களைவான். பதிமூன்று மணி நேரம் அந்த படப்பிடிப்பு நடந்தது. கவரில் வைத்து சம்பளம் வழங்கினார்கள். இருபது லட்சம் யென் அந்த கவரில் இருந்தது.  அந்த இரவு முழுவதும் பர்கண்டி ஒயின் வாங்கி வந்து அவளது அறையில் குடித்துக்கொண்டாடினாள். அவளுடைய உடலை கொண்டாடினார்கள், ரசிகர்கள். அடுத்த பத்து நாட்களில், மீண்டும் வேறொரு நிறுவனம் அழைத்தது. அந்த முறை மருத்துவ தாதி வேடம் யுகிகோவிற்கு. நோயாளியாகப் படுத்திருக்கும் சுஷுகியை எழுப்பவேண்டும்.  திரும்பவும் இருபது லெட்சம் யென்.  யுகிகோவின் போர்னோ சீ.டிக்கள் எல்லா கடைகளிலும் கிடைத்தன.  அப்பா முழுவதுமாக பேச்சை நிறுத்திக்கொண்டார். அம்மாவுடன் எப்போதாவது வெளியே காபி அருந்துவது மட்டும் எஞ்சியிருந்தது.

ஒரே வருடத்தில், ஆடி கார் வாங்கினாள்.  ரொப்பங்கியின் புகழ்பெற்ற அபார்ட்மெண்டில் வீடு வாடகைக்கு எடுத்தாள். ஏகப்பட்ட தோழர்களும் தோழிகளும் அந்த உலகில் கிடைத்தனர்.  ஒரு நிறுவனம், யுகிகோவை மாடலாக வைத்து,  சிந்தடிக் யோனியை தயாரித்து பிளாஸ்டிக் குழாயில் வைத்து விற்றது.  படத்தில் யுகிகோவின் அளவுகள், மிக சரியாக குறிப்பிடப்பட்டு,  அவளுடன் புணரும் உண்மை அனுபவத்திற்கு வாங்க சொல்லி தூண்டியது. பள்ளி மாணவர்களும், வயதானவர்களும் யுகிகோவின் யோனியை வாங்கி தொடர்ந்து புணர்ந்தனர்.

ஒரே வருடத்தில் சம்பளம் பாதியாகக் குறைந்தது. இரண்டாவது வருடத்தில் மீண்டும் பாதியானது. மூன்றாவது வருடத்தில் ஹார்ட்கோர் போர்னோவிற்கு அழைத்தனர்.

சில வருடங்கள் கழித்து, ஒரு ஏப்ரல் மாத இறுதியில், ஒரு வாய்ப்பு கூட அந்த மாதத்தில் இல்லை என்று உணர்ந்தபோது, யுகிகோ தனது வாழ்க்கை முற்று பெற்றதை உணர்ந்தாள். ரொப்பங்கியின் அபார்ட்மெண்டை காலிசெய்து, டோக்கியோவை தாண்டியிருந்த இகாசி முராயமாவிற்கு சென்றவுடன் தனது தொலைபேசி எண்ணை மாற்றினாள். முழுவதுமாக பழைய தொடர்புகளை துண்டித்தாள். சிகையலங்காரத்தை மாற்றினாள்.  வீட்டிலிருந்து, மருந்து கடைகளுக்கு பை தயார் செய்யும் பணியை செய்தாள். இரவில், தூக்கம் என்பதே கொடும் கனவுகளுக்கு இடையில்தான் என்பதாக மாறியிருந்தது.  இரவுகளை தவிர, வாழ்க்கை இயல்பானதாக மாறியதுபோல் இருந்தது அவளுக்கு. ஆனால் பகுதிநேர பணிகளுக்கு சென்றபோது, எல்லா இடங்களிலும் அவளை புணர்ந்த சிலர் மிச்சமிருந்தனர்.  உடைகளை தலைமுதல் கால்வரை உடுத்தத் தொடங்கியது அப்போதுதான்.

[ads_hr hr_style=”hr-dots”]

3

2011 மார்ச் 11 அன்று கணினியில் மங்கா படித்துக்கொண்டிருந்தான் ரிக்கு.  பாட்டி வெளியில் போயிருந்தாள்.  மணி மதியம் 2.45 ஆகியிருந்தது. கதவில் கட்டியிருந்த மணி ஆடியது.  முதலில், பாட்டி திரும்பவும் வந்து கதவை திறக்கிறாள் என்று நினைத்தான் ரிக்கு.  அறையிலிருந்த விளக்கு ஆடியபோதே அதை பூகம்பமென்று உணர்ந்தான். நின்றுவிடும் என்று விளக்கை பார்த்துக்கொண்டிருந்தான். சற்று நேரமான பிறகும் ஆடும்பொருட்கள் நிற்கவில்லை.  மாறாக இன்னும் பலமாக ஆடியபோது, பயமடைந்தான் ரிக்கு. உடனடியாக திரையை விலக்கி சாலையை பார்த்தான். எதிர்வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த கார் முன்னும் பின்னும் வேகமாக அசைந்தது. மின்சாரக் கம்பங்கள் கீழே விழுவது போல் வளைந்தது. இண்டர்நெட்டில் செய்திகளை வாசித்தான்.  செண்டாய் பூகம்பம் அளவு 9.1 என்று காட்டியது.  தொடர்ந்து எச்சரிக்கை மணி ஒலிக்க தொடங்கின.  அனைவரும் வீடுகளிலிருந்து இறங்கி சாலையில் நிற்பதை பார்த்தான் ரிக்கு.

மார்ச் மாதம் என்பதால் குளிர் அதிகமிருந்தது.  ஜெர்கினை எடுத்து மாட்டிக்கொண்டு வெளியே வந்தான். ஒரு பள்ளி மாணவன் தனது கைபேசியில் தகவல் அனுப்பிக்கொண்டிருந்தான். வயதான ஒரு பெண், ஆபத்து,  ஆபத்து என்று கத்திக்கொண்டு சாலையில் குறுக்கு, நெடுக்காக ஓடினள்.  ரிக்கு தொடர்ந்து நடந்தான்.  அந்த தெருவை தாண்டி நடப்பது பல வருடங்கள் கழித்து இதுதான் முதல் தடவை என்பதால் அனைத்தும் புதிதாகத் தோன்றியது.

சாலையில், சில இடங்களில் பிளவு ஏற்பட்டிருந்தது. ரயில் நிலையம் நோக்கி சென்றபோது, பாட்டி கையில் பை நிறைய காய்கறிகளுடன் பதட்டமாக வந்து கொண்டிருந்தாள்.  ரிக்குவை அதிசயமாக பார்த்தாள். ரிக்கு வீட்டுக்கு போய்விடலாமென்றாள். ”நீங்கள் வீட்டுக்கு செல்லுங்கள்” என்று சொல்லிவிட்டு தொடர்ந்து நடந்தான். ரயில்கள் நிறுத்தப்பட்டிருந்தது.  சாலைகளில் பயணிகள் நின்று கொண்டிருந்தனர்.  ஒரு நடுத்தரவயது ஆசாமி,  தண்ணீர் கேன்களை செவன்லெவனில் வாங்கி கட்டிக்கொண்டு சைக்கிளில் விரைந்தார்.

ரயில் நிலையம் அருகே இருந்த வணிக அங்காடியில் தொலைக்காட்சி தெரிந்தது.  சுனாமி அலைகள் கடலோர கிராமத்தை தாக்கும் காட்சி அதில் வந்தது.  நின்று பார்த்தான். செண்டாய் விமான நிலையமருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள், கடல் தண்ணீரில் படகுகள் போல மிதந்து சென்றது. மரவீடுகள் தெப்பம் போல் நீரில் சென்றது. அப்படி சென்ற  வீட்டின் ஜன்னலில், ஒரு கிழவர் கைகளை ஆட்டியபடி சென்றார்.

சாலை முழுவதும் கடல் நீரால் சூழப்பட்டிருக்க படகு போல் இழுத்து செல்லப்பட்ட காரின் ஓட்டுனர் இருக்கையில் ஒரு பாட்டி செய்வதறியாது ஸ்டியரிங்கை சுற்றிக்கொண்டிருந்தாள்.

அலுவலகத்திலிருந்து பாதியில் திரும்பிய ஆண்களும் பெண்களும் கறுப்பு நிற சூட் அணிந்து வீடுகளை நோக்கி நடந்துக்கொண்டிருந்தனர்.  பகல்பொழுதில் அப்படி அவர்கள் திரும்பிவருவதை பார்ப்பது, நடுக்கம் தரவில்லை.  மாறாக அமைதியை உணர்ந்தான் ரிக்கு.

செண்டாய்க்கு செல்வது என்று உடனடியாக முடிவெடுத்து வீட்டுக்கு திரும்பினான் ரிக்கு. அன்றிரவு முழுவதும் தொடர்ந்து நிலம் நடுங்கிக்கொண்டிருந்தது. ஃபுக்குசிமோ அணு உலை வெடித்து சிதறுவதை தொடர்ந்து தொலைக்காட்சியில் காட்டிக் கொண்டிருந்தார்கள்.

மூன்று நாட்கள் கழித்து மார்ச் 14 அன்று செண்டாய் செல்லும் ரயிலில் ஏறினான் ரிக்கு. பாட்டி முதலில் மறுத்து பார்த்தாள். ரிக்குவின் உறுதியை கண்டதும் பணம் கொடுத்தாள்.

மியாகி மாவட்டத்திலுள்ள ஒகாவா நகரில் இறங்கி தன்னார்வலாக பதிவு செய்து கொண்டதும், நீல நிறத்தில் ஒரு பேட்ச் கொடுத்தார்கள்.  மையபள்ளியொன்றில் தங்கவைக்கப்பட்டிருந்த வீடு இழந்தவர்களுக்கு உணவு வழங்கும் குழுவில் அவனது பெயர் இணைக்கப்பட்டது. வேனில் ஏறினான். அனைவரும் உரத்தகுரலில் காலை வணக்கம் சொன்னார்கள். அவ்வளவு பேரும் தன்னைப் பார்ப்பதை உணர்ந்து, தலையை அசைத்துவிட்டு எதுவும் சொல்லாமல் ஒரு இருக்கையில் ஒதுங்கிக் கொண்டான்.  அந்த மூன்று நாட்களில் ஏகப்பட்ட விசித்திரங்களை பார்த்துவிட்டவர்கள்,  ரிக்கு அப்படி எதுவும் சொல்லாமல் அமர்ந்ததையும் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் தங்களுடைய செல்போனைப் பார்க்கத் தொடங்கியிருந்தனர்.

மொத்தம் அறுநூறு பேர் அந்த பள்ளியின் உள்ளரங்கு மைதானத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். குடும்பமாக தங்கியிருந்தவர்கள் டெண்ட் போட்டு அதனுள் குளிர் ஊடுருவாமல் இருக்க கார்ட்போர்டு அட்டைகளை இட்டு, அதில் படுத்திருந்தனர். உணவு வழங்கியபின் அங்குள்ள முதியவர்களுக்கு கழிப்பிடம் செல்ல உதவினான்.  ஒரு முதியவரை அப்படி கழிப்பிடம் கொண்டுசெல்ல அழைத்துச் செல்லும்போது,  எதிரே வந்த பெண் பாதையில் வந்தது குறித்து மன்னிப்பு கேட்டு ஒதுங்கி நடந்தாள்.  அவளை கண்டு ஒருகணம் திகைத்தான் ரிக்கு. நன்கு தெரிந்த முகமாக தோன்றியது. அவள் கரும் நீல நிறத்தில் ஸ்கார்ட்டும், வெளிர் நீல நிறத்தில் சட்டையும் அணிந்திருந்தாள்.  ரிக்குவை கடந்து கதவை திறந்த நொடியில் அவளை அடையாளம் கண்டுக்கொண்டான்.

மதிய இடைவேளையில் தங்கியிருந்தவர்களுக்கு உணவு வழங்கிவிட்டு, தனியாக அமர்ந்து அரிசிக்குள் பொதிக்கப்பட்டிருந்த மீனை கடல்பாசியுடன் சேர்த்து சாப்பிட்டுக்கொண்டிருந்தாள், யுகிகோ. அவள் அருகே சென்று கொஞ்சம் தயங்கி ”மதிய வணக்கம்” என்றான் ரிக்கு. அவளும் ஒரு கணம் தயங்கி பதில் வணக்கம் சொன்னாள். தன்னிச்சையாக, முழுவதும் ஆடை அணிந்திருக்கிறோமா என்று சரிபார்த்தாள் யுகிகோ. எந்த நிமிடமும் அவன் தன்னுடைய படங்கள் பற்றி பேசக்கூடுமென்று உள்ளூர நடுங்கினாள்.

”கசாயில், உங்கள் வீட்டிற்க்கு எதிரே நான் இருக்கிறேன்” என்றான் ரிக்கு.

“அப்படியா? அங்கு ஒரு பாட்டியை அல்லவா பார்த்திருக்கிறேன்”

“அவளை மட்டுமே தெருவாசிகள் பார்த்திருக்கக் கூடும். நான் பெரும்பாலும் வெளியே வருவதில்லை” .

யுகிகோ உடனடியாக புரிந்து கொண்டாள். ”காபி அருந்துவோமா?”, என்று கேட்டாள்.

இருவரும் அருகிலிருந்த தானியங்கி இயந்திரத்தில் காபி கேன் எடுத்தார்கள்.

“எவ்வளவு மோசமாக முதியவர்களும் குழந்தைகளும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்”, என்றான் ரிக்கு.

”ஆம்.  இதே ஓகாவா நகரில்,  சுனாமியிலிருந்து தப்பிக்க பாலத்தைக் கடக்க முயற்சி செய்கையில், பள்ளிக் குழந்தைகள் அலையில் அடித்துச்செல்லப்பட்டனர்.”

”அது தெரிந்துதான் இங்கு வந்தேன்.”

ஐந்து வயது சிறுமி சசாகி, கால்சட்டையணிந்து, இருபக்கமும் போனிடெயில் தொங்க, கூடாரங்களுக்கிடையே புகுந்து ரிக்குவிற்க்கும், யுகிகோவிற்க்கும் இடையில் வந்து ஒளிந்து நின்று கொண்டு எட்டிப் பார்த்தாள்.  வலது கையில் சாப்ஸ்டிக் குச்சிகளுடன், பொக்கை வாய் சிரிப்பு பொங்க சசாகியை பார்த்துக்கொண்டிருந்தார், ஒரு முதியவர்.

”இந்தச் சூழலிலும், இந்த முகாமிலுள்ளவர்கள் ஒருவர்மீது மற்றொருவர் காட்டும் பரிவும், அன்பும் நம்பமுடியாதபடி இருக்கிறது.” என்றான் ரிக்கு.

”ஓய்வெடுக்க முடியாதபடி தொடர்ந்து செய்ய இங்கு வேலை இருக்கிறது. ஆனால் இந்த ஏழு வருடங்களில், இந்த மூன்று தினங்களாகத்தான் கனவுகள் இல்லாது நான் உறங்குகிறேன்” என்றாள் யுகிகோ.

புன்னகைத்தான் ரிக்கு.


ரா.செந்தில் குமார் 

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.