‘பாராசைட்’ திரைப்படத்தில் காலநிலை மாற்றம்

போங் ஜூன்-ஹோவின் முக்கியமான புதிய திரைப்படமான பாராசைட் (Parasite), வர்க்கப் பாகுபாடு பற்றிய அதன் சித்தரிப்பு மற்றும் வெளிவந்த காலக்கட்டம் காரணமாக பெரும் விமர்சனக் கவனத்தை ஈர்த்துள்ளது. இது இந்தக் காலக்கட்டத்திற்கான படம், ஏனென்றால், நீங்கள் பார்க்கும் எல்லா இடங்களிலும் – கொரியா மற்றும் ஹாங்காங்கிலிருந்து அமெரிக்கா வரை, சிலி மற்றும் அர்ஜென்டினாவிலிருந்து ஸ்பெயின் மற்றும் லெபனான் வரை – தொழிலாள வர்க்க மக்கள் (மற்றும் சில தொழில்முறை-நிர்வாக-வர்க்க மக்கள்) நவதாராளமயத்தை முடிவுக்குக் கொண்டுவரக் கோரியும், அரசியல் சுதந்திரம் வேண்டியும், மேலும் நியாயமான எதிர்காலத்தை நோக்கியும் கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கதாபாத்திரங்களை ஹீரோக்கள் மற்றும் வில்லன்களாக உள்ளடக்காமல், இப்படம் கிளர்ச்சிகளுக்கு ஊட்டமளிக்கும் அடிப்படை செல்வ ஏற்றத்தாழ்வுகளை ஆராய்கிறது: வர்க்க ஒற்றுமை வருவது கடினம் என்பதையும், செல்வந்தர்கள் வெளிப்படையாக அரக்கர்கள் அல்ல என்பதையும் இப்படம் காட்டிச் செல்கிறது. பணம் படைத்தவர்க்கும், தொழிலாள வர்க்கத்துக்கும் இடையில் கனன்று கொண்டிருக்கும் முரண்பாடுகளைச் சுற்றுச்சூழலின் சீர்குலைவு எவ்வாறு மோசமாக்குகிறது என்பதை பாரசைட்டின் வர்க்கரீதியிலான அணுகுமுறை கச்சிதமாக வெளிப்படுத்துவதை, இந்த படத்தை பற்றிய துல்லியமான விமர்சனங்களும்கூட வெளிப்படுத்த தவறிவிட்டன.

சமகால இலக்கியப் புனைகதைகளில் உள்ள காலநிலை மாற்றம் குறித்து கவனம் செலுத்தாததைப் பற்றி வருத்தப்படும் நாவலாசிரியர் அமிதவ் கோஷின் தொடர் விரிவுரைகளை உள்ளடக்கிய, ‘பெரும் சீர்கேடு: காலநிலை மாற்றமும், சிந்திக்க இயலாமையும்’ (The Great Derangement: Climate Change and the Unthinkable) என்ற புத்தகத்துக்கான அற்புதமான மதிப்பாய்வில், காலநிலை குறித்து வெளிப்படையாகக் கூறும் விவரிப்புகளை மட்டும் பார்ப்பது தவறு என்று கேட் மார்ஷல் (Kate Marshall) கூறுகிறார். கோஷின் (Ghosh) புதிய நாவலான ‘துப்பாக்கித் தீவு’ (Gun Island) உட்பட, கிம் ஸ்டான்லி ராபின்சனின் (Kim Stanley Robinson) ‘நியூயார்க் 2140’ (New York 2140), செரி டெமலைனின் (Cherie Demaline) ’தி மரோ தீவ்ஸ்’ (The Marrow Thieves) மற்றும் உமர் இ.எல். அக்காட்டின் (Omar El Akkad) ‘அமெரிக்கப் போர்’ (America War) போன்ற சமீபத்திய நாவல்களில் அத்தகைய விவரிப்புகள் நிச்சயமாக கவனம் செலுத்தப்பட வேண்டியவை. காலநிலை மாற்றம் குறித்து குறைவான அளவே அக்கறை கொண்டிருக்கும் ஒரு நாவல் அல்லது ஓர் கதை விவரிப்பு, அப்பிரச்சினைகளைப் பற்றி என்ன சொல்ல முடியும்? நாம் காலநிலை மாற்றத்தை நேரடியாக நம் கவனத்தின் மையத்தில் வைக்க ஆரம்பித்தால் என்ன ஆகும்? ஆகையால், அவற்றை நாம் எப்படி வாசிக்க வேண்டும் என்பதைக் கருத்தில்கொள்வது முக்கியமானது.

பாரசைட் படத்தின் மிகவும் மறக்க முடியாத காட்சிகளுள் ஓன்றை நான் பார்த்துக் கொண்டிருந்தபோது எனக்குள் சில கேள்விகள் எழுந்தன. அந்தக் காட்சியில், கிம் கி-டேக் (காங்-ஹோ பாடல்) தனது மகன் மற்றும் மகளுடன் பார்க் வீட்டிலிருந்து நள்ளிரவில் தப்பித்து, கொட்டும் மழையில் படிக்கட்டுச் சரிவுகளில் இறங்கிக் கொண்டிருப்பார். ஒரு சரிவு வீட்டின் பிரதான தளத்திலிருந்து கீழ்நோக்கிச் செல்கிறது. மற்றொரு நீண்ட படிக்கட்டுச் சரிவு அந்த வீடு அமைந்திருக்கும் உச்சியிலிருந்து ஒரு தாழ்வான நெடுஞ்சாலையை நோக்கிச் செல்கிறது. இந்தப் படிக்கட்டுகள் மீண்டும் மற்றொரு படிகட்டுகளுக்கு இட்டுச் செல்கின்றன, இப்படிக்கட்டுகள் மூலம் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ள அவர்களின் அடித்தள குடியி

ருப்புப் பகுதியை அடைகின்றனர்.

இந்தக் காட்சியின் தீவிரம், என்னால் கைப்பற்ற முயன்ற அளவுக்கு, அந்தத் தருணம் எவ்வளவு திகைப்பூட்டக்கூடியது என்பதைக் கடத்த முடியாமல் உரைநடை தோற்றுவிடுகிறது. கவனமாக இயற்றப்பட்ட இந்தக் காட்சிகளில் ஆழமான பல அர்த்தங்கள் நுட்பமாக உட்பொதிக்கப்பட்டுள்ளன, மேலும், இசை அந்தத் தருணத்தின் தீவிரத்தன்மையை உயர்த்துகிறது, இத்தகைய, திகிலூட்டக்கூடிய மற்றும் நரம்பைக் பிடிக்கும் காட்சிகளை ஒரு அமைதியான வாசிப்பைக் கொண்டு மீட்டுருவாக்கம் செய்ய இயலாது. காலநிலை மாற்றம் குறித்த வர்ணனையாக அந்தத் தருணங்களை புரிந்துகொள்ள சினிமாவின் இத்தகைய காட்சி மற்றும் ஒலி சார்ந்த குணங்கள் முக்கியமான அம்சங்களாக உள்ளன. ஒரு திரைப்படத்தால் தர இயலாத பல தன்மைகளை அச்சுப் புனைவுகள் வழங்குகின்றன. ஆனால் இங்கே போங்கின் திரைப்படம் மிகவும் மோசமான வானிலையின் விளைவுகளை நெருக்கமான மற்றும் அற்புதமான பாணியில் பதிவுசெய்கிறது – ஆனால் இந்தத் தருணத்தை இந்த வழியில் புரிந்துகொள்ள நம்மிடம் ஒரு சட்டகம் இருந்தால் மட்டுமே இது சாத்தியம் ஆகும்.

இந்தக் காட்சி கிம் குடும்பத்திற்கும் மற்றும் அவர்களது முதலாளிகளான பார்க்குகளுக்கும் இடையிலான இடைவெளியைக் காட்டுகிறது. பார்க்குகள் ஒரு பணக்கார குடும்பமாகும், அவர்கள் நவீனமாக வடிவமைக்கப்பட்டுள்ள அதிக இடவசதி உள்ள, அழகுப்படுத்தபட்ட புல்வெளியைக் கொண்டுள்ள ஒரு பெரிய வீட்டில் வசிக்கின்றனர். (இது படம் நடக்கும் சியோலின் நடுவில் கற்பனை செய்ய முடியாத ஒன்று). பார்க்கின் மனைவி பெரும்பாலும் சும்மா இருக்கிறாள், வீட்டை இயக்கவைக்கும் அடிப்படை வேலைகளைக் கூட அவளால் செய்ய முடியவில்லை. அவர் தனது இரண்டு குழந்தைகளின் மீது அளவு கடந்த அன்பு கொண்டிருக்கிறாள், அவர்கள் இருவரும் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் என நம்புகிறாள். முக்கியமாக அவளது மகன் மீது அதிக அக்கறை செலுத்துகிறாள். அவன் கட்டுப்படுத்த முடியாத சிறுவனாக அங்கும் இங்கும் சுற்றித் திரிந்துகொண்டும், இந்திய விளையாட்டுகளை விளையாடிக்கொண்டும், சாதாரணமான தரத்தில் படங்கள் வரைந்து கொண்டும் இருக்கிறான். மகள் பெரும்பாலும் சலிப்புடன் காணப்படுகிறாள், கவன ஈர்ப்பிற்காக பட்டினி கிடக்கிறாள், அவளது ஆசிரியரிடமிருந்து கற்றுக்கொள்வதைவிட ஆசிரியரை முத்தமிடுவதில் அதிக ஆர்வம் காட்டுகிறாள். பார்க் எப்போதும் வேலையில் அதிக கவனம் செலுத்தும் நபராக இருந்து கொண்டிருக்கிறார். பெரும்பாலும், இந்தக் குடும்பம் தீயவர்களாகவோ அல்லது அவர்களது பெரிய வீட்டில் வேலை செய்யும் ஊழியர்களின் உழைப்பை சுரண்டும் கொடூரமானவர்களாவோ சித்தரிக்கப்படவில்லை. அவர்கள் சாதாரணமானவர்கள், தங்கள் ஊழியர்களுக்குக் கண்ணியமானவர்கள், அவர்கள் வாழ்க்கையை வாழும் வழியில் சாராசரியான மனிதர்கள்.

கிம்கள் ஊழியர்கள் ஆவர், அவர்கள் படத்தின் ஆரம்பத்தில் நாம் பார்க்கும்போது வறுமையின் விளிம்பில் இருக்கிறார்கள். அவர்களில் யாருக்கும் வேலை இல்லை, வேலைவாய்ப்புக்கு மிக நெருங்கி அவர்களால் செல்ல முடிந்தது என்றால் அது பீட்ஸா பெட்டிகளைச் சிறிய கட்டணத்திற்கு ஒன்று சேர்க்கும் வேலையின் வழியாக மட்டுமே. அதில் அவர்கள் தேர்ச்சி பெற்றவர்களும் அல்ல. கிம் மகனுக்கு பார்க் மகளின் ஆசிரியராகும் ஒரு வாய்ப்பு கிடைக்கிறது (அவர் ஒரு கல்லூரி மாணவராக இருப்பதாகப் பொய் சொல்கிறார்) இந்த நிலையில் அவர் தனது சகோதரிக்கு பார்க் மகனுக்கான நடத்தைசார் சிகிச்சையாளராகப் பணியாற்றும் வாய்ப்பை பெற்றுத் தருகிறார். (அவளுக்கு இதில் முறையான பயிற்சி இல்லை). மிகக் குறுகிய கால அளவில், தந்தையும் தாயும் ஓட்டுனர் மற்றும் பணிப்பெண்ணாக வேலை செய்யும் வாய்ப்பை அடைகிறார்கள். கிம் குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் தங்கள் பதவிகளைப் பெறுவதற்கு பொய்களைக் கூறி அந்த வேலைகளில் இருந்த பணியாளர்களை இரக்கமின்றி வெளியேற்றவேண்டியிருந்தது.

படத்தின் நடுப்பகுதியில், பார்க்குகள் தங்கள் மகனின் பிறந்தநாளைக் கொண்டாடும் விதத்தில் முகாமிடச் சென்ற சமயத்தில் கிம்கள் ஒரு கொண்டாட்ட இரவைப் பெறுவதைப் பார்வையாளர்கள் காணலாம். மேலும் கிம்க்கள் தங்கள் முதலாளியின் பெரிய வீட்டில் தங்களுக்கென ஒரு சிறிய முகாம் அமைக்கிறார்கள், மகள் நிதானமான ஓய்வுநேரக் குளியலை மேற்கொள்கிறாள், அதைவேளையில் மகன் தனது மாணவியின் இரகசிய நாட்குறிப்புகளை வேடிக்கையாக வாசிக்கிறான். அவர்கள் முதல் அறையில் உள்ள இருக்கையில் கூடுகிறார்கள். பார்க்குகளின் உணவையும், மதுவையும் பருகிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, அவர்கள் முழு குடும்பத்தையும் வேலையமர்த்துவதற்காக பார்க்குகளைத் தந்திரமாகக் கையாண்டு, அதில் வெற்றியும் அடைந்து, இப்போது சொகுசான வசதிகள் மற்றும் செல்வங்களைக்கொண்ட ஓர் பிரகாசமான எதிர்காலத்தை அவர்கள் கனவு கண்டுகொண்டிருக்கிறார்கள். வெளியில் மழை கடுமையாகப் பெய்யத் தொடங்குகிறது. இவர்கள் வசதியான முதல் அறையில் பாதுகாப்பாக அமர்ந்து பெரிய புல்வெளியில் மழை விழுவதைக் கண்ணாடிச் சுவரின் வழியே பார்த்துகொண்டிருக்கிறார்கள். படத்தின் தொடக்கத்தில் சாத்தியமற்றதாகத் தோன்றிய ஒன்றை சாதித்துள்ளார்கள், சிறந்த வேலைவாய்ப்பைக் கண்டடைந்தார்கள்.

அடுத்ததாக வரும் அற்புதமான திருப்பத்தை நான் கெடுக்க விரும்பவில்லை. ஏனென்றால் நான் குறிப்பிட விரும்பும் விஷயத்துக்கு அது பொருத்தமற்றது. மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், அடுத்தடுத்தத் தொடர் கூச்சல் குழப்பங்களுக்கு நடுவே பார்க்குகள் தங்கள் முகாம் பயணத்திலிருந்து திரும்பி வருகின்றனர், அவர்கள் முகாம் அமைத்துள்ள நதி அதன் கரைகளை வெடித்துச் செல்வதால் அவர்களின் பயணம் திடீரென முடிவுக்கு வருகிறது. கிம் குடும்பத்தினர் அவர்களது உடனடி வருகையைப் பற்றிய குறுகிய எச்சரிக்கையைப் பெற்றுவிடுவதால், அவர்கள் செய்த குளறுபடிகளைச் சுத்தம் செய்து மறைக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளபடுகின்றனர். பார்க்குகள் வீட்டைவிட்டு விலகி இருக்கும்போது, அவர்களுடைய அம்மா வீட்டை கவனிக்கும் பொறுப்பில் இருப்பதால், அந்த வீட்டில் அம்மாவை மட்டும் இருக்கச் செய்கிறார்கள். பிறகு, தந்தையும் குழந்தைகளும், வெள்ளத்தில் மூழ்கிய தங்கள் வீட்டிற்கு மறக்கமுடியாத வகையில் தப்பிக்கிறார்கள்.

இந்தக் காட்சி படத்தின் போக்கிற்கு முக்கியமானது. ஏனென்றால் கி-டேக் ஒரு கதாபாத்திரமாக அன்பானவராக, எப்போதும் வேண்டியதை நிறைவேற்றிக் கொடுக்கக்கூடிய நபராக இருந்து கொலை செய்யத் துணியும் அளவுக்கு கடின இதயம் கொண்டவராக மாற்றம் அடைகிறார். இம்மாற்றம் அவரது முகத்தில் பிரதிபலிப்பதை நாம் காண்கிறோம். படத்தின் முதல் பாதி முழுவதும் புன்னகையுடன் கூடிய கி –டெக்கின் முகமானது, அவர் பிரதான அறையின் காபி மேசையின் கீழ் ஒளிந்திருக்கும்சமயத்தில் அவரிடம் வெளிப்படும் வாசனைப் பற்றி அவரது முதலாளிகள் பேசிக்கொள்வதை ஒட்டுக் கேட்கும்போது வெற்று முகமூடியாகக் காட்சியளிக்கிறது. பார்க் வீட்டிலிருந்து மழையில் அவர்கள் தப்பித்தபோது அவரது முகம் மீண்டும் வேறொன்றாக மாறுகிறது. மழையால் இடம்பெயர்ந்த மக்களுக்காக ஒரு நெரிசலான முகாமாக மாறிய உடற்பயிற்சிக் கூடத்தில் அவர் அமர்ந்திருக்கும்போது அவரது தோற்றம் அச்சுறுத்தும் இயலாமையை வெளிப்படுத்துகிறது. பார்க் தனது இளைய மகனுக்கு ஆடம்பரமான முறையில் பிறந்தநாள் விருந்தை ஏற்பாடு செய்ய ஒத்துழைக்கும் பொருட்டு கீ-டேகை உடனடியாக வருமாறு தொலைப்பேசியில் அழைக்கிறார். இந்தியச் சடங்கில் அணியப்படும் தலைக்கவசங்களை அணிந்துகொண்டு கையில் சுத்தியல் போன்ற பொம்மையை வைத்துக்கொண்டு அவரும், பார்க்கும் புதரின் பின்னால் ஒளிந்தபடி இருக்கிறார்கள். பார்க்கின் மகனுக்கான பிறந்தநாள் கேக்கை எடுத்துவர கேட்டுக்கொள்ளப்பட்ட கிம்மின் மகளின் மீது பாய, அவளை தாக்கும்போது பார்க்கின் மகன் ஒரு நல்ல இந்தியக் கதாபாத்திரத்தில் வந்து அவளை காப்பாற்ற இந்த ஹாலிவுட் காட்டுமிராண்டித்தன விளையாட்டை அரங்கேற்ற காத்துக்கொண்டு இருக்கிறார்கள், அவர்கள் புதரின் பின்னால் ஒளிந்திருக்கும்போது கீ-டேக்கின் முகம் மேலும் ஒரு முறை திரையின் மையத்தில், மறக்கமுடியாத பரிமாணத்தில் காட்டப்படுகிறது.

இப்படத்தில், இந்தத் திடுக்கிடும் இந்திய உருவகங்களைக் காட்டிலும், கி-டேக்கில் நிகழும் மாற்றம் கவனிக்கதக்க ஒன்றாகும். அவர் முன்பு பாராமுகமாக இருந்த ஒன்றை இப்போது அவர் காண்கிறார். அவரும் அவரது குடும்பத்தினரும், மற்ற ஏழை தொழிலாள வர்க்க மக்களை அவர்களின் வேலையிலிருந்து வெளியேற்றுவதிலும், பார்க்குகளை ஏமாற்றி அவர்களுக்கு வேலை கொடுப்பதிலும் எவ்வளவு வெற்றிகரமாக செயல்பட்டாலும், இறுதியில் அவையெல்லாம் களைந்துவிடக்கூடியவை. அவர்களின் துன்பம் பார்க்குகளின் கண்களுக்கு புலப்படாத ஒன்று, அவர்கள் தங்களின் மொத்த அண்டை வீட்டார்களும் வெள்ளத்தால் சூழ்ப்பட்டுள்ளனர் – குடியிருப்பாளர்கள் ஒரு உடற்பயிற்சிக் கூடத்தில் தஞ்சம் அடைய வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளனர் – என்ற உண்மையைக் கண்டுகொள்ளாமல் தங்கள் வாழ்க்கையைத் தொடர்கிறார்கள், கி-டேக்கும் அவரது குழந்தைகளும் இலவச உணவுக்காக நீண்ட வரிசையில் காத்திருந்ததையும், இலவச ஆடைகளைப் பெறுவதற்காக முண்டியடித்துக் கொண்டிருந்ததையும் பார்க்குகள் காணாதிருந்தனர். அவர்கள் அந்தக் காட்சியைப் பார்த்திருந்தாலும்கூட பெரிதளவு அக்கறைக் காட்டியிருக்க மாட்டார்கள்.

மழை, வெள்ளம் காரணமாக இவை அனைத்தும் வெளிச்சமாகின்றன. வானிலை மாற்றம் போன்ற ஒன்றைப் பற்றி கவலைப்பட வேண்டிய நிலையில் பார்க்குகள் இல்லை. அதே நேரத்தில் கிம்கள் வலிமிகுந்த பாதிப்புக்குள்ளாகும் நிலையில் இருக்கிறார்கள், குறிப்பாக சூழல் தீவிரமாக மாறும்போது. அங்கு காலநிலை மாற்றம் பற்றி நேரடியாக எதுவும் குறிப்பிடப்படவில்லை, ஆனால் அவர்களின் சுற்றுப்புறத்தில் மழை கொட்டும் காட்சி, தங்கள் வீட்டில் உள்ள உடைமைகளை மீட்க முயலும்போது கழிவுநீர் கலந்த வெள்ளம் கிம்ஸின் இடுப்பு உயரமாகவும், பின்னர் கழுத்து உயரமாகவும் அதிகரிக்க அவர்கள் அவ்வெள்ளத்தைக் கடக்கும் திகிலூட்டும் காட்சி காலநிலை மாற்றம் ஏற்படுத்திவரும் அழிவு எவ்வளவு இயல்பான நிகழ்வாகவும் தீவிராமான ஒன்றாகவும் மாறிவருகிறது என்பதை அழுத்தமாக நினைவூட்டுகிறது. நதி அதன் கரைகளை உடைத்து வெளியேறுகிறது, பார்க்குகள் தங்கள் முகாம் பயணத்திலிருந்து வீட்டிற்கு விரைந்தோட வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுகின்றனர், இந்த நிகழ்வு சமீபத்திய ஆண்டுகளில் கொரியா முழுவதும் நிகழ்ந்து கொண்டிருக்கும் வெள்ளப்பெருக்கு பற்றிய இடைவிடாத செய்திகளை நினைவுபடுத்துகிறது.

போங், அவரது முந்தைய திரைப்படங்களில் சுற்றுச்சூழல் மீதான அக்கறைகளில் மிகுந்த ஆர்வம் காட்டியிருப்பதையும் நாம் நினைவில் கொள்ளலாம். ஓக்ஜா (Okja) (2017) திரைப்படம் தொழில்துறை விவசாயத்தின் அறரீதியான பிரச்சினைகளைப் பற்றியது, குறிப்பாக, கால்நடைகள் மீதான துன்புறுத்தல்களில் கவனம் செலுத்துகிறது. ஸ்னோபியர்சர் (Snowpiercer) (2013) காலநிலை மாற்றத்தின் விளைவுகளை சரிசெய்வதற்கான முயற்சியால் அழிவுக்குள்ளான உலகில் கதை நிகழ்கிறது. அவரது முதல் வெற்றி திரைப்படமான தி ஹோஸ்ட் (The Host) (2006) கூட சுற்றுச்சூழல் இனவெறியின் விளைவுகளைப் பற்றிய ஒரு படமாகும்; அமெரிக்க இராணுவம் அப்புறப்படுத்தும் நச்சுக் கழிவு சியோலின் மையப்பகுதி வழியாக ஓடும் நதிக்குள் கலக்கப்பட்ட நிஜ நிகழ்வை அடிப்படையாக கொண்டது. இந்தப் படங்கள், சுற்றுச்சூழல் பிரச்சினைகள் ஒருபோதும் இயக்குநரின் சிந்தனையிலிருந்து வெகுதொலைவில் இருந்தது இல்லை என்பதை தெளிவுபடுத்துகின்றன.

சுரங்கப்பாதைகள் மற்றும் அவர்களின் நெரிசலான அடித்தள குடியிருப்பில் இருந்து வருவதாகத் தோன்றும் கிம்ஸிலிருந்து வெளியேறும் வாசனைகூட, தொழிலாள வர்க்கத்தின் உறுப்பினர்கள் பூமியோடு நெருக்கமான உறவில் இருப்பதைக் காட்டுகிறது. அத்தகைய உறவிலிருந்து அவர்கள் தப்பிக்க முற்படுகையிலும், அது அவர்களுடனே ஒட்டிக்கொள்கிறது, அந்த வாசனையானது பாதிப்பு மற்றும் ஆபத்திற்கான ஒரு அறிகுறியாகும்., படத்தில் மோதல் வெடிக்கும்போது, எந்தக் குடும்பமும் காப்பாற்றப்படுவதில்லை, அதேவேளையில் எப்போதும், தொழிலாளர் வர்க்க உறுப்பினர்களே வானிலை மோசமடைந்து வருவதற்கு அதிக விலை கொடுப்பவர்களாக இருக்கின்றனர்.


மின் ஹ்யூங் சாங் (Min Hyoung Song), பேராசிரியர் – பாஸ்டன் கல்லூரி; Chicago Review of Books தளத்தில் வெளியான கட்டுரை.

தமிழில் ராஸ்மி மஜீத்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.