அம்மாவை மனைப்பாம்பு பார்த்துக்கொண்டிருந்தது

30

கக்கடைசியில்
ஏர்வாடி தர்க்காவில்
அம்மாவைச் சேர்த்தோம்.
சங்கிலி பிணைத்து அழைத்துப்போகையில்
என் தலை தடவினாள்.
அப்போது கலைந்த முடியை
எத்துணை முறை சீவியும்
ஒழுங்குபடுத்த முடியவில்லை.

29

வெள்ளி அன்று
அம்மா பூண்டிருப்பது
மௌனமா
விரதமா
தனிமையா தெரியாது
அன்றைய மதிய உலை
கொதபுதா என்று கொதிய
வேடிக்கை பார்ப்பாள்.


28
அம்மாவின் காதோரச் சுருள்முடியிடம்
அப்பாவுக்கு இருந்த பயபக்தி
என் மீசை முறுக்கிவிளையாடும்
மனைவியிடம் இல்லை
அதாவது
சுத்தமாக இல்லை.

27

தனியாக
பிறந்த வீடு போகும்போது
அடி இமையில் மிருதுவாக
மை தீற்றுவாள்…
அம்மாவோடு போகும் அதிபெண்ணே
இத்துணை நாளாய்
அம்மாவின் இமையிலா இருந்தாய்?

26

எல்லாத் துயரங்களையும்
சிறுசுடராக்கி
அகலில் ஏற்றி
மாடக்குழியில் வைத்துவிட்டு
வீட்டுக்குள் போகிறாள்
அம்மா.
அவள் கடக்க விரும்பாத இரவு
வந்துகொண்டிருக்கிறது
முன்போல.

25
புகைப்படத்தில் அப்பாவுக்குப்
பின்னால் நிற்கும் அம்மா
இக்கரையில்
இருந்து
அக்கரைக்கு
ஒற்றை ஆளாய் நீந்திக் கடந்தாள்
ஆற்றை.
சத்தியமாக அது ஆறு இல்லை.
என்னவென்று சொல்லத் தெரியவில்லை.

24
தெருக்குழியின் நாள்பட்ட மழைநீரை
நக்கிக் குடித்தது பூனை.
‘இந்தப் புலிக்கு என்னாச்சு
பூனைபோல நக்கி நக்கிக் குடிக்குது’
என்றாள் அம்மா.
நொடியில் பூனையைப் புலியாக்கும் `அ’வித்தை
அம்மாவுக்குத் தெரியும்.

23

மனைவிக்குக் காத்திருந்த
மின்சார ரயில் நடைமேடையில்
‘ஏன்ப்பா நின்னுக்கிட்டே இருக்க
உட்கார்’ என்றாள் சிமெண்ட் பலகை காட்டி
யாரோ ஓர் அம்மா.
நான்
என் அம்மாவின் பக்கத்தில்
உட்கார்ந்துகொண்டேன்.

22

இலைகளோடு
இரண்டொரு வேப்பம் ஈக்கிகளை ஆய்ந்து
தலையில் செருகிக்கொண்டு
ஓர் உருமநேரத்தைக் கடந்தாள்
அம்மா.
அவள் பொன்மூக்குத்தி
வேப்பம்பூவாக மினுக்கம் காட்டியது.

21

‘நீ போ
இந்த அநாதை மேகத்தை
வீட்டுக்கு அனுப்பிட்டு வர்றேன்’ என்று
சொன்னபோது
முதன்முறையாக அம்மாவைப் பார்க்கப்
பயமாக இருந்தது.

20

அயிரை மீன் என்றால்
அம்மாவுக்கு கொள்ளை பிரியம்.
அவள்
குமுளி நீரில் கால் நுழைக்க
கொலுசுபோல சூழும் அயிரைகள்.
பிறகு
தாவாக்கட்டை பிடித்த
செல்லம் கொஞ்சுவாள்
என் முகத்தில் மொய்க்கும்
அயிரைகள்.

19

ஐந்து வயது வரை
வாய்ப்பேச்சு வரவில்லை
நாக்கில் அலகு குத்தி
அம்மனுக்குக் காவடி தூக்கினாள் அம்மா.
அவள் குருதியில் இருந்து பெருகியதுதான்
என் வார்த்தைகளும்.

18

முளைப்பாரி கும்மியில்
இரண்டு தட்டு
மூன்று தட்டு
நான்கு தட்டு என
கைவளையை மேலே ஏற்றிவிட்டு
வேகம் கூட்டுவாள் அம்மா
என் குரல்வளை நெரிபட… நெரிபட…

17

கர்ணனுக்கு
மனைவி பரிமாறாத உணவை
அப்பாவுக்குப் பரிமாறினாள் அம்மா.
அப்போது நானும் தம்பியும்
அப்பா தோளில் உட்கார்ந்து உண்ட
கவசக்குண்டலங்களாக இருந்தோம்.
அம்மாவை நிரம்பப் பிடித்த
அப்பத்தா சொன்ன சித்திரம் இது.

16
நான்கு முறை அம்மாவுக்குப்
பேய் பிடித்தது.
எருக்கம்விளாரால் விளாசினார் பூசாரி.
வலி மீறி சிரித்த அம்மாவை
மிகவும் பிடித்த தருணம் அது.
வழிந்து பெருகிய கண்ணீரைத்
துடைத்துக்கொண்டேன்.

15
உடலெங்கும் திகுதிகுவென எரியும்
ஆற்றங்கரை செங்கல்சூளை.
நிலைத்த விழிகளோடு பார்த்த அம்மா
வீடு வந்த பின்
தலைக்குத் தண்ணீர் ஊற்றுகிறாள்.
குளிரவே இல்லை
அவளது தாவரம்.

14
யாரும் புழங்காத ஒழுங்கையில்
அக்கம்பக்கம் நோட்டம்விட்டு
சுருட்டு குடிப்பாள் அம்மா.
அப்போது அவள் வெளியிடும்
மீச்சிறு மேகம் பொழிந்த கருணையில்
துளிர்கொண்ட சுள்ளி நான்.
அல்லது
அம்மாக்கள் வாழ்வில் அப்பன்களுக்கு
பெரிதாய் ஒன்றும் வேலை இல்லை.
மற்றும்
வேலையே இல்லை.

13

உச்ச வெந்நீரில்
உயிர்ச்சேவலைத் தலைக்குப்புற அமுக்கி
பிள்ளைகளுக்கு
விருந்தமுது படைக்கும் அம்மா
மானாவாரிக்கொல்லையில்
மஞ்சள் நிறப் பூ பூத்து
காய்த்து
கனிந்து
‘நெத்து’ப்பருவம் அடைந்துவிட்டது துவரை
உனைப்போலவே.

12

ஆயிரம் கண்ணிருக்கு
அடைய கூடு இருக்கு
உறங்க விதியில்ல
உட்கார முடியவில்ல
நான் கடித்த
எச்சிற்பழம்
அம்மா.

11

சற்று அன்னாந்து
பின்வழியும் கூந்தல் லாவி
மிதமாக முதுகிலடித்து
கீழது மேலாக
மேலது கீழாகச் சுழற்றி
கொண்டை வனைந்து
கடைசிக் கூர்நுனியை
கட்டைவிரல்கொண்டு உள்ளுக்குள்
நீ செருகும்போது
தொண்டைக்குழிக்குள் கத்தி இறங்கியதுபோல்
இருந்தது அம்மா.

10
வயலில் கால்கள் புதைய
நாற்றுநடும் அம்மாவைப் பார்த்திருக்கிறேன்…
தன்னைப் பிய்த்துப் பிய்த்து
சேற்றில் ஊன்றுவாள்.
பின்னொரு பருவத்தில்
அவள் உடலை அறுவடைசெய்து
பசியாறுவோம்.

9
சினைப்பசுவின் அடிவயிற்றை நீவி நீவி
உன்னிப்பூச்சிகளைத் தறித்துப்போடும்
அம்மாவின் கைகளில் ஒன்று
என்னோடு இருந்திருந்தால்
அதன் சுண்டுவிரலை இறுகப்பற்றி
திரும்பிப் பார்த்து
புருவங்கள் நெரித்து
‘என்ன?’ என்று வாழ்க்கையை
ஒரு கேள்வி கேட்டிருப்பேன்.

8
பால்குடி மறக்க
கற்றாழைச் சாற்றைக் காம்பில் இழுவி
முலை ஈந்த அம்மா,
வாழ்வின் முதற்கசப்பையும்
உன் உடலில் இருந்தே
அருந்தப்பெற்றேன் என்பதையாவது
சொல்லிவிடுகிறேன்.

7
அந்தியில் இருந்து இறங்கி
ஒத்தையடிப் பாதையில்
அம்மா வந்துகொண்டிருந்த ஒரு சித்திரம்
மனதில் இருக்கிறது.
அந்நேரம் அவள் நேர்வகிட்டில்
நானும் ஒரு பேனாக
இறங்கி வந்துகொண்டிருந்தேன்.

6
அம்மாவின் வெளிர்நீலநிறச் சேலையை
ஒருமுறை சொப்பனத்தில் கண்டேன்.
நதிபோல அது நெளிந்துகொண்டிருந்தது
மீன்குஞ்சுபோல நானதில் நீந்தினேன்.

5
‘மங்கும்போது மா பெருகும்
பொங்கும்போது புளி பெருகும்’ என
நீ பேசிக்கொண்டிருந்தபோது
நம் வீட்டு மனைப்பாம்பு
உனையே பார்த்துக்கொண்டிருந்ததை
நான் பார்த்தேன் அம்மா.

4
சாயுங்கால கோடையில்
திருகையில் இட்டு
உளுந்து உடைக்கையில்
உன் அம்மா வந்தாள் அம்மா.
அப்போது அவளைக்
கட்டிக்கொண்டு அழுதாயே
அந்தத் திருகை மீது
என் மகள் அமர்ந்திருக்கிறாள்
அவள் மூக்குத்தி மினுங்குகிறது.

3
நெடுநாள் கழித்து
வீடு திரும்பும் மூத்தமகன்
குறுக்குவிட்டத்தைப் பார்த்து
‘அம்மா’ என மறுகுகிறான்
கண்கள் கண்ணீரில் பளபளக்கின்றன.
சுருக்கில் இருந்து
கழுத்தைத் தளர்த்திக்கொண்டு
கீழிறங்கி வந்த அம்மா
மூக்கை உறிஞ்சியபடி
‘வாப்பா இப்பதான் வந்தியா
இரு சோறு போடுறேன்’ என்கிறாள்.

2
சாரையும் நாகமும் பிணையல் போடும்
வைக்கோல்போர் தோட்டத்தின்
சீமைக்கருவேல மரத்தடியில்
அழுதபடி
ஓரிரவு முழுக்க
தனித்துப் படுத்திருந்தாயே
ஏன் அம்மா?
நீயும் பார்த்தாய்தானே நிலவே…

1

சிறுவயதில் மண்டை உடைந்து
கதறியபடி
வீட்டுக்கு ஓடிவருகையில்
‘அய்யோ எம்புள்ளக்கி
சேசுநாதர் சாமிக்கி ஊத்தன்ன
ரத்தம் ஊத்துதே’ எனப் பதறி
மாராப்பால்
காயம் பொத்தினாள் அம்மா.
எந்த நேரத்திலும் பிள்ளைகளைக்
கடவுளாக்கிவிட முடிகிறது அம்மாவால்.
கடவுளருக்குத்தான்
இங்கிதமில்லாமல் மண்டை உடைந்துவிடுகிறது.


  • கதிர்பாரதி

12 COMMENTS

  1. கதிர்பாரதி யின் அம்மா கவிதை …… நம் அம்மாவின் கதையும் கூட…… வாழ்த்துக்கள் அண்ணா

  2. கதிர்பாரதியின் கவிதைகள்
    ஒவ்வொன்றும் மிக் அருமை.

    அம்மாவிற்கான இக்கவிதைகளை ஒரு முறை மட்டும் படித்துவிட்டு
    கடந்துபோக இயலவில்லை.

    மிகவும் ரசித்த கவிதையிது..

    சிறுவயதில் மண்டை உடைந்து
    கதறியபடி
    வீட்டுக்கு ஓடிவருகையில்
    ‘அய்யோ எம்புள்ளக்கி
    சேசுநாதர் சாமிக்கி ஊத்தன்ன
    ரத்தம் ஊத்துதே’ எனப் பதறி
    மாராப்பால்
    காயம் பொத்தினாள் அம்மா.
    எந்த நேரத்திலும் பிள்ளைகளைக்
    கடவுளாக்கிவிட முடிகிறது அம்மாவால்.
    கடவுளருக்குத்தான்
    இங்கிதமில்லாமல் மண்டை உடைந்துவிடுகிறது.

  3. ஐந்து வயது வரை
    வாய்ப்பேச்சு வரவில்லை
    நாக்கில் அலகு குத்தி
    அம்மனுக்குக் காவடி தூக்கினாள் அம்மா.
    அவள் குருதியில் இருந்து பெருகியதுதான்
    என் வார்த்தைகளும்.// அபாரம்

  4. மிக அருமை, அம்மா எனும் பிரம்மாண்டத்தின் வெவ்வேறு படிமங்களை மிகச்சில வார்த்தை பிரயோகங்களில் கண்முன் காட்டுகிறார். மேலிருந்து கீழாக எண் வர்சை நேர்த்தியான உக்த்தி.

    மிகவும் ரசித்தவை:

    புகைப்படத்தில் அப்பாவுக்குப்
    பின்னால் நிற்கும் அம்மா
    இக்கரையில்
    இருந்து
    அக்கரைக்கு
    ஒற்றை ஆளாய் நீந்திக் கடந்தாள்
    ஆற்றை.
    சத்தியமாக அது ஆறு இல்லை.
    என்னவென்று சொல்லத் தெரியவில்லை.

    போ
    இந்த அநாதை மேகத்தை
    வீட்டுக்கு அனுப்பிட்டு வர்றேன்’ என்று
    சொன்னபோது
    முதன்முறையாக அம்மாவைப் பார்க்கப்
    பயமாக இருந்தது.

    வெள்ளி அன்று
    அம்மா பூண்டிருப்பது
    மௌனமா
    விரதமா
    தனிமையா தெரியாது
    அன்றைய மதிய உலை
    கொதபுதா என்று கொதிய
    வேடிக்கை பார்ப்பாள்.

  5. மிக மிக அருமை..நீண்ட இடைவெளிக்கு பிறகு ஓர் படைப்பு உணர்வைத் தொட்டதென்றால் அது இதுவே

  6. தாய்மைச்சாயத்தை விரும்பியோ விரும்பாமலோ பூசிக்கொண்ட குமரியவள். வாழ்வு மறுக்கப்பட்டு வாதையிலொடுங்கி அவ்வப்போது ஆவேசம் காட்டுபவள்… மாடத்தில் துயர் இறக்கி, முற்றத்தில் களிப்பிறைத்து அடுக்களையிலும் கொல்லையிலும் அரசாட்சி புரிபவள்.. அம்மா என்னும் அழைப்புக்குள் அன்பின் சமுத்திரத்தையே அடக்கிடக்கூடிய அதிசயக் கமண்டலமவள்.

    இவ்வுலகின் ஒட்டுமொத்த அம்மாக்களுக்கான தாலாட்டுகள் இவை. மனம் நெகிழவைக்கும் கவிச்சுரங்கம் படைத்தக் கவிஞருக்குப் பாராட்டுகள்.

  7. அம்மா என்றொரு அற்புதம் ! வான், நிலா, தாரகை, மேகம், கடல் , குளம், கனல் , அனல் அனைத்திலும் விரவிக் கலந்து நிற்கும் அம்மா என்ற உணர்வை அழகாக அறிமுகப்படுத்தும் கவிதை !

  8. கண்கலங்கிப் பெருமைப்படுகிறேன் பெருமூச்சு விடுகிறேன், கவிதையம்மா அரவணைப்பு இன்னும் இருக்கிறது அறிந்து.

  9. அம்மா…..
    எல்லோரும் நினைப்பது போல்
    ஒற்றையல்ல.
    பெற்ற பின்னர்
    வந்துவிடுகிறது பன்மை அவளுக்கு.
    இருக்கும் போது அல்ல
    இன்மையில் காணலாம்
    இல்லத்தை தழுவி உறைந்திருக்கும்
    அவளின் ஆயிரம் கரங்களை.

    அற்புதம் கவிஞரே.

    கானப்ரியன்

  10. மிகச் சிறப்பு. எந்தக் கவிதையை அம்மாவைப் போல் தூக்கிக் கொஞ்சி முத்தமிட? குட்டி ஈன்ற அம்மா பன்றியாய் மாறி எல்லாக் குட்டிகளையும் அடிவயிற்றுப் பால் மடிகளுக்கிடையில் பதுக்கிப் பாதுகாக்கத் தோன்றுகிறது. வாழ்த்துகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.