வெகுஆண்டுகள் கழித்து அலுவலகப் பணிநிமித்தமாக 2008-ஆம் ஆண்டில் கும்பகோணத்துக்கு மாற்றலாகிச் சென்றேன். ஊரும் மனிதர்களும் மொழியும் பிடிபட ஓரிரு வாரங்களானது. தெருக்களும் ஊரின் அமைப்பும் பரிச்சயமானது. நாவலின் நினைவைக் கிளறியது. உடனடியாக வாசிக்கவேண்டும் என்ற ஆவல். எழுதப்பட்ட களத்திலிருந்து அதன் கதாபாத்திரங்கள் உலவிய மண்ணிலிருந்து நாவலை வாசிப்பது தனி அனுபவம். இந்த முறை வெகு நிதானமாகவே படித்தேன். காந்தி பார்க்கை, ஆனையடியை, துக்காம்பாளையத் தெருவை, கும்பேச்வரன் கோயிலை, கடலங்குடித் தெருவை, மேட்டுத் தெருவை, மகாமகக் குளத்தை நேரடியாகப் பார்த்து நின்றேன். ஐம்பது ஆண்டுகளில் நிறைய மாறிவிட்டிருந்தன. கோர்ட்டுக்குப் போகும் வழியில் கல்லூரிக்கு எதிரில் இருந்த பகுதி முற்றிலும் வேறுமாதிரியிருந்தது. முக்கியமாக காவேரி நாவலில் கண்ட காவேரியாக இருக்கவில்லை. நாவல் இப்போது வேறு அனுபவங்களைத் தந்தது. முந்தைய வாசிப்பில் அவ்வளவாய் கவனத்துக்கு வராத சங்கீதம் இப்போதுதான் என் காதில் விழுந்தது. நாவலின் இன்னொரு அடுக்காக அமைந்திருந்த சங்கீதம், நாவலை வேறொரு கோணத்தில் திருப்பிக் காட்டியது. நாவல் ஏன் கொண்டாடப்படுகிறது என்பதற்கான காரணங்கள் தெளிவுபடத் தொடங்கின.
குறிப்பாக, வெளிச்சத்தைக் காணமுடியாமல் இருட்டிலேயே முடங்கிக் கிடக்கும் யமுனாவுக்கானது இந்தச் சூழல். தி.ஜா யமுனாவைப் பற்றிக் குறிப்பிடும்போதெல்லாம் ஒளியைப் பற்றி வெளிச்சத்தைப் பற்றி எழுதுகிறார். யமுனாவின் ‘அழகின் தோல்வியே இப்படி இருளாகக் கவிந்திருக்கிறது’. எப்போதுமே வெளிச்சம் இல்லாத, ஏதோ ஒரு சூன்யம், ஏதோ ஒரு வறட்சி மனதைப் பிடித்துக்கொள்கிற துக்காம்பாளையத் தெரு. அந்த இருப்பிடமே அவளது ஒளியற்ற வாழ்வுக்கு சாட்சி. விலைமலிவு என்பதைவிட அய்யருக்கு இருட்டில் வந்துபோவது வசதியாக இருந்திருக்கவேண்டும். ஆனால் பார்வதியும் யமுனாவும் இறுதிவரையிலும் அந்த பாழிருட்டிலேயேதான் காலம் கழிக்க நேர்கிறது.
அற்புதமான கட்டுரை. மனமார்ந்த நன்றிகள் எழுதிய ஆசிரியருக்கும், வெளியிட்ட கனலிக்கும்.