பா.திருச்செந்தாழை கவிதைகள்.

  • ரகசியங்களற்றவனின்
    நிழலில்
    கண்ணாடி வளர்கிறது.
  • எப்படியாயினும்,
    இதற்கு ரகசியமெனப் பெயரிட
    நான் இன்னொருவருக்கும்
    இதனை தத்துக்கொடுக்க வேண்டியதிருக்கிறது.
  • ரகசியங்கள் பெறுமதியானவை
    என்பதிலிருந்து
    வெளியேறிவிட்ட என் புதுவயதில்
    நான் சிறிய காற்றாடிகளை
    நீண்ட தொலைவில் செலுத்தும்
    ஞானம் பெற்றேன்.
  • எல்லாவற்றிலிருக்கும்
    ரகசியங்களை
    என் வெகுளித்தனம் சுரண்டி விலக்குகிறது.
    அங்கே குருதியற்ற ஓருடல் வெளிப்படுகிறது.
    எடையிழந்த எல்லாமும்
    மிதக்கத்துவங்குகின்றன.
  • ரகசியமற்ற ஈருடல்கள்
    புணர்ந்து கொண்டிருக்கின்றன.
    இப்போது
    கண்ணாடி உடல்கள்
    பிறக்கும் பருவம்.
  • கடவுள் என்னை சபித்தார்.
    ரகசியங்கள் ஆரஞ்சின் தோல் போன்றவை எனச்சொல்லியபடி.
    தீவினைகளற்ற வாழ்வில்
    நீ இருக்கும்போதே இறப்பாய் என்றார்.
    நான் ஆற்றில் மிதந்து செல்கின்ற
    சடலத்திற்கு
    எவ்வளவு மீன்கள்
    எவ்வளவு மீன்கள்
    என முனங்கினேன்.
  • ரகசியங்களற்ற ஒன்றை
    நான் வரைந்தேன்.
    இப்போது
    அது உங்களைப் பார்ப்பதை
    நீங்கள் ஏன் உணரவேயில்லை.

-பா.திருச்செந்தாழை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.