இராவணத் தீவு – பயணத் தொடர்

“Travel opens your heart

Broaden your mind

And fills your life with

Stories to tell ” 

 

– Paula  Bendfeldt

 

Paula Bendfeldt இன் இந்த வரிகள் எவ்வளவு உண்மையானவை. தனக்குள்ளாகவும், வெளியேயும் பயணப்பட்டுக் கொண்டே இருக்கின்ற மனிதன் வாழ்நாள் முழுவதும் கற்றுக்கொண்டே இருக்கின்றான். மறுபுறம் மனதளவில் இளமையாகவே இருக்கின்றான் என தோன்றுவதுண்டு. பயணம் செய்கின்ற மனிதனின் உலகம் விரிவடைகின்றது. பயணம் செய்கின்ற மனிதனின் வானம் விசாலப்படுகின்றது. அவனது கால்கள் அவனுக்கு புதிய  நம்பிக்கைகளைத் தருகிறது. புதிய பாதைகளைக் காட்டுகின்றது. தனக்குள்ளாகவும், வெளியேயும் பயணித்துக்கொண்டே இருக்கின்ற மனிதனுக்கு வாழ்க்கை அதன் மர்ம முடிச்சுகளை ஒவ்வொன்றாய் அவிழ்க்கத்துவங்குகின்றது.

Paolo Coelho சொல்வதுப்படி “Travel is never a matter of money but courage ” . பணம் வேண்டுமானால் ஒரு குறிப்பிட்ட இடத்தை நோக்கி கொண்டுபோய் சேர்க்கலாம். ஆனால் பயணத்தை நேசிக்கின்ற மனம் இருந்தால் மட்டுமே மேற்கொண்டு பயணப்பட முடியும் என்று நினைக்கின்றேன். ஒரு பயணியால் கடைசி வரை சுற்றுலாப்பயணி  போல நடந்துகொள்ளவே முடியாது. பயணம் என்பது ஒரு தொடர்ச்சி.  ஒன்றின் முடிவிலிருந்து இன்னொன்று ஆரம்பிக்கின்றது.

தீவுகளுக்கென்று ஒரு தனித்த வனப்பு இருக்கின்றது. தீவுகளுக்கென்று ஒரு தனித்த காலநிலையிருக்கின்றது. தீவுகளுக்கென்று சில தனித்துவமான உயிரிகள் இருக்கின்றன. இலங்கை வெறுமனே 65610 சதுர கிலோமீட்டரைக் கொண்ட ஒரு தீவு.  இந்த தீவில் பார்ப்பதற்கும், கேட்பதற்கும், உங்களை மறந்து நடந்து செல்வதற்குமென்று எவ்வளவோ இடங்கள் இருக்கின்றன. கடலும், மலைகளும், நதிகளும், நீர்வீழ்ச்சிகளும், புத்தமடாலயங்களும், கோவில்களும், வரலாற்றிடங்களும் நிரம்பிய இலங்கை தீவு நிச்சயமாக உங்களைப் பிரமிப்பில் ஆழ்த்தும். கொஞ்சம் அமைதியினை தரும். இதுவரை நீங்கள் சந்தித்த மனிதர்களிடம் இருந்தும், காலநிலையிலிருந்தும் வேறுபட்ட உணர்வைத் தரக்கூடும். வழியில் உங்களைக் கொஞ்சம் நிறுத்தி, எங்கோ பார்த்த,  கேட்ட பிரம்மையை ஒவ்வொரு வரலாற்றுக் கட்டிடங்களும் ஏற்படுத்தும். ஒரு குறுகிய காலத்தில் ஒட்டுமொத்த இலங்கையைச் சுற்றிப்பார்க்கக் கூடியதாக இருக்கும். ஏனெனில் இலங்கையென்பது பரப்பளவில் சிறிய ஒரு குட்டித்தீவு.

உலகின் பல்வேறுபட்ட பகுதியில் உள்ள மனிதர்களும் இந்த சிறிய தீவைத் தேடி வருகின்ற அளவு இலங்கை தீவு வரலாறு முழுவதும் தனித்துவமாக இருந்திருக்கிறது. கிழக்கு திசையின் முத்து, கிழக்கு திசையின் தானிய சாலை என சொல்லுமளவு தன்னிறைவான நாடாக, அது இருந்திருக்கிறது. சீனர்களினால் இரத்தினங்களின் தீவு, கிரேக்கர்களினால் ரெப்ரொபோன், போர்த்துகேயர்களால் சய்லான், சியம் இனத்தவர்களினால் கிழக்கு திசையின் சுவர்க்கம், ஆங்கிலேயர்களினால் சிலோன் எனத் தனித்துவமாகப் பெயரிட்டு  அழைக்குமளவு இலங்கைத்தீவு தனித்துவமுடையதாக இருந்திருக்கின்றது.


இந்தியப் பயணங்களில் இருந்தபோது தான் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் அதன் வரலாற்றுப் பாரம்பரியங்களுக்கும் இடையே ஒரு நீண்ட தொடர்பு இருப்பதை உணர்ந்தேன். இந்தியாவில் இருந்து வருகிறவர்கள் அதன் தொடர்ச்சியாகப் பார்ப்பதற்கென்று பல இடங்கள் இருக்கின்றன. உதாரணத்திற்கு புராணக் கதையொன்றின் படி விஷ்வகர்மா என்கிற பிரபஞ்சத்தின் முதன்மையான கட்டிடக் கலைஞரினால் வடிவமைக்கப்பட்ட தங்க தேசமே இலங்கை எனப்படுகிறது. அஜந்தா குகைகளில் விஷ்வகர்மாவிற்கு என தனியே ஒரு குகை இருக்கிறது. கல்கத்தாவில் விஷ்வகர்மா பூஜையைச் சிறப்பாகக் கொண்டாடுவதைப் பார்த்திருக்கின்றேன்.

வெறும் நம்பிக்கை சார்ந்த கதைகள், கதாபாத்திரங்கள் என்பதைத் தாண்டி புராண இதிகாசங்களில் சொல்லப்படுகிற சில இடங்களும், நினைவுகளும் இந்தியா இலங்கை முழுவதும் நிரம்பியிருக்கின்றன. இந்த தீவைப் பொறுத்தவரை இராவணனுக்கு என்று ஒரு கதையிருக்கிறது, இயக்கர், நாகர்களுக்கு என்று ஒரு கதையிருக்கிறது, விஜயனுக்கென்றும், சோழர்களுக்கென்றும்,  போர்த்துக்கேயர்களுக்கென்றும், ஒல்லாந்தர்களுக்கென்றும், ஆங்கிலேயர்களுக்கென்றும் ஒரு நீண்ட வரலாறு இருக்கிறது. இலங்கை தீவு  எத்தனையோ, போரினையும், அழிவினையும் பார்த்திருந்தாலும் இயற்கை அதை மீண்டும் மீண்டும் மீளுருவாக்கம் செய்துகொண்டேயிருக்கின்றது. பிரமாண்டமான இந்த இயற்கைக்கு முன்னால் மனிதன் எப்போதும் எதுவுமற்று போகின்றான்.

இந்த இராவண தேசத்தில் நிச்சயமாக பார்க்கவேண்டும் என்று நினைக்கின்ற இடங்களை ஒரு தொடராக எழுதலாம் என்றிருக்கின்றேன். தொடர்ந்து வாசியுங்கள். இராவண தேசம் நோக்கி வாருங்கள்.


-நர்மி

ஆசிரியர் குறிப்பு:

நர்மி: இலங்கையிலுள்ள கண்டி நகரில் வசித்து வருகின்றார். இவர் பனிப்பூ என்ற கவிதைத் தொகுப்பையும் , கல்கத்தா நாட்கள்  என்ற பயண நூலையும் எழுதியுள்ளார். இவ்விரு நூல்களும் உயிர்மை பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

15 COMMENTS

  1. பயணக் கட்டுரை ஒன்றிரண்டு மட்டுமே படித்துள்ள நான் இதை – இத்தொடரை வரவேற்கிறேன்! அருமையான துவக்கம் கொடுத்திருக்கும் கட்டுரையாளர் நர்மி அவர்களைப் பற்றியும் விவரித்தால் நன்று; வாழ்த்துகள் நர்மி!

    • நன்றி தோழர் தொடர்ந்து வாசித்து கருத்துகளை பகிருங்கள்

  2. முன்னுரையே சிறப்பான அறிமுகம். இத்தொடரில் தொடர்ந்து பயணிக்க ஆவலாய் உள்ளேன். நர்மி அவர்களுக்கு வாழ்த்துகள்!

  3. நல்ல அறிமுகம் இருந்தாலும் வேகமாக முடிந்துவிட்டதாக தோன்றுகிறது நர்மி இன்னும் நகர் பற்றி பேசியிருக்கலாம் என்று தோன்றுகிறது உங்களிடம் இருந்து மேலும் எதிர்ப்பார்க்கிறேன் வாழ்த்துக்கள் பயணங்கள் தொடரட்டும் இணைந்தே இருக்கிறோம்

    • இன்னும் பத்து தொடருக்கு மேல் எழுதப்போகிறேன். கட்டுரையின் நகர்விற்கு ஏற்ப நிறையவே கதைக்கலாம் மணி.

      • வாழ்த்துக்கள் நர்மி. சிறப்பாக எழுதுங்கள். நீங்கள் ஒரு பயணி. ஒரு கவிஞர். ஒரு எழுத்தாளர். ஒரு ரசனையாளர். உங்களால் அற்புதமான பயணக்கட்டுரைகளை எழுத முடியும். உங்கள் கல்கத்தா நாட்களே அதற்கு சாட்சி. உங்கள் எழுத்துக்கள் எதிர்காலத்தில் பேசப்படும். நீங்கள் எதிர்கால தமிழ் இலக்கியத்தில் நட்சத்திரமாய் மின்னுவீர்கள் நர்மி.அன்பும் பாசமும் நிறைந்த வாழ்த்துக்கள். அன்புடன் உங்கள் வாசகன் கார்த்திக்.

  4. பயணம் சார்ந்த தொடர் என்பது வெறுமனே நீளம், அகலம் பற்றி பேசும் கோட்டுச் சித்திரம் அல்ல. அது பல நுட்பமான நினைவுகளின் தொகுப்பு. அதை பதிவாக்க தேவை, நாம் காணும் உலகின் மீதான, சக மனிதன் மீதான கரிசனம் மட்டுமே.. அந்த தேவை உணர்ந்து வழங்க பெற்ற அறிமுகமாகவே நான் இராவணத் தீவு தொடரைப் பார்க்கிறேன். தொடர்ந்து பயணிக்க வாழ்த்துக்கள் நர்மி 💐

  5. வெறுமனே நீலம் அகலம் தொடர்பில் பயணக்கட்டுரைகள் இருப்பதை நானுமே விரும்புவதில்லை. நன்றி தோழர்

  6. நான் பார்க்க விரும்பும் நாடுகளுள் இலங்கை முக்கியமானது. இலங்கைத் தோழிகள் வாயிலாய் கேட்டறிந்த வரலாற்று, அழகியல் தன்மையோடு உங்கள் பார்வையும் இணைந்து ஆர்வத்தை அதிகப்படுத்துகிறது. தொடர்கிறேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.